PUBLISHED ON : நவ 16, 2019

உணவுப் பழக்கம் மனநலத்தை பாதிக்குமா?
உணவு குழாய், இரைப்பை, கல்லீரல் போன்ற செரிமான மண்டல உறுப்புகள் அனைத்தும், உணவை செரிப்பதற்கான வேலையை செய்கின்றன. செரிமான மண்டலத்திற்கும், மூளைக்கும் தொடர்பு இல்லை என்று தான், நவீன மருத்துவத்தில் நினைத்திருந்தோம்.தேர்வு சமயத்தில், மன அழுத்தத்துடன் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். காரணம், செரிமான நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு. இது நரம்பு சம்பந்தப்பட்டது.சமீபத்தில், ஹார்வேர்டு மருத்துவப் பல்கலையில் நடந்த ஆராய்ச்சியில், குடலில், கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றில், ஒரு சில பாக்டீரியாக்கள் அதிகமானால், மன அழுத்தம் வருகிறது. வேறு சில அதிகரித்தால், உற்சாகமான உணர்வு வரும் என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. செரிமான மண்டலம், இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது.
நன்மை செய்யும்பாக்டீரியாக்களைஅதிகரிக்க முடியுமா?
குடலில் இருக்கும் பாக்டீரியாக்களில், சில பாக்டீரியாக்கள் தான் அடையாளம் தெரிய வந்துள்ளன. கோடிக்கணக்கான இந்த கிருமிகளில், பெரும்பாலானவை நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தான்.இவற்றில், குறிப்பிட்ட வகை கிருமிகள் மட்டுமே, மூளையுடன் நேரடியாக தொடர்பு கொண்டது என, உறுதியாக தெரிந்தால் மட்டுமே, அவை அதிக அளவில் வளர்வதற்கும், மன பிரச்னைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை, மருந்துகள் கொடுத்து அழிப்பதற்கும், வகை செய்யலாம்.சர்வதேச அளவில், பல முன்னணி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், இது பற்றி தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் இது சாத்தியப்படலாம்.
உணவு வழியாக இவற்றை வளர்க்க முடியுமா?
முடியும். உணவு, வாழ்க்கை முறை மாற்றத்தின் வழியேயும், ஒரு சில பாக்டீரியாக்கள் வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்ட சில உணவுகள் சாப்பிட்டால், உற்சாகமான உணர்வுகள் வரும்; வேறு சில, மன அழுத்தத்தை தரும். அது கூட, பாக்டீரியா வழியே நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே நாங்கள் நினைக்கிறோம்.தற்போதைக்கு, மதுவை எடுத்துக் கொள்ளுங்கள்; குறிப்பிட்ட காலத்திற்கு உற்சாகத்தை தரும். அதன்பின், பல பிரச்னைகளை ஏற்படுத்தும். காலையில், பொங்கல் சாப்பிட்டால் துாக்கம் வருகிறது.
அதே நேரத்தில், காபி, டீ குடித்தால், சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. இவையெல்லாம், பாக்டீரியா வழியாக நடக்கிறதா, இல்லையா என்பது, இன்னும் உறுதியாக தெரியவில்லை.உணவின் வழியாக பாக்டீரியாக்கள் செயல்படுவது, மருத்துவ ரீதியில் உறுதியானால், உணவின் வழியே சிகிச்சை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பாரம்பரிய மருத்துவ முறை, உணவுப் பழக்கத்தை அடிப்படையாக கொண்டதாகவே உள்ளதே?
உணவுக்கும், மனதிற்கும் தொடர்பு இருப்பது, அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். அலோபதி மருத்துவத்தில் அப்படி பார்ப்பதில்லை. அதே சமயம், பாக்டீரியா மூலமாகவே, இது வேலை செய்கிறது என்பது தெரியாமல் இருந்திருக்கலாம்.
பாரம்பரிய முறையோடு, நவீன முறையும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா?
ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவ முறைகளில், எந்த நோய்க்கு என்ன உணவு தருகின்றனர்; தவிர்க்க வேண்டியது எது; எப்படி உணவை தயாரிக்கின்றனர்; எப்போது சாப்பிடலாம் என, பல வழிமுறைகளை சொல்கின்றனர். உணவு, மருந்தாக செயல்படுவதாக நம்புகின்றனர். நவீன மருத்துவத்தில், எந்த உணவு, எந்த உறுப்புற்கு நல்லது என்பதெல்லாம் தெரியாது. உப்பு, சர்க்கரையை வைத்தே, நாங்கள் முடிவு செய்கிறோமே தவிர, உணவிற்கு மருத்துவ குணங்கள் இருப்பது தெரியாது.பல நோயாளிகளைப் பார்த்த மருத்துவ அனுபவத்தில், வயிற்றுப்போக்கு இருந்தால், பால், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என சொல்கிறோம்.பாரம்பரிய மருத்துவ நுால்களை படித்து, புரிந்து கொள்ளும் முயற்சி பரவலாக நடக்கிறது.
டாக்டர்பட்டா ராதாகிருஷ்ணா,
குடல் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை
97909 24876
