PUBLISHED ON : செப் 23, 2018

* என் மாமாவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. சமீப காலமாக அவருக்கு வயிறு வீங்கி உள்ளது. மருத்துவர் நுரையீரலை சுற்றி நீர் உள்ளது என்கிறார். இது எதனால் ஏற்படுகிறது?
அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பழுதாகி விடும். எனவே நீர் வயிற்றில் சேர்ந்து வீங்கி விடும். அந்த நீர் நுரையீரலையும் சுற்றிக் கொள்ளும். முதலில் மது அருந்துவதை நிறுத்தி விட்டு கல்லீரல் பழுதை சரி செய்தால் வயிற்றில் சுற்றி உள்ள நீர் வற்றிவிடும். நுரையீரலை சுற்றி உள்ள நீரும் தானாகவே வற்றிவிடும்.
* என் அம்மாவிற்கு சிறிது துாரம் நடந்து சென்றாலே இருதயம் அதிகமாக துடிப்பது போல் உள்ளது என்கிறார். மூச்சு விடவும் சிரமப்படுகிறார். இதற்கு என்ன காரணம்?
நடக்கும் போது அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக இருதயத்தில் பிரச்னை, நுரையீரல் பிரச்னை (ஆஸ்துமா, இளைப்பு), மூச்சுக்குழாய் பெரிதாக இருத்தல், ரத்தக்கொதிப்பு மற்றும் ரத்த சோகை போன்ற பல காரணங்களினால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மருத்துவரை அணுகி எந்த காரணத்தினால் மூச்சு வாங்குகிறது என்று ஆராய்ந்து அதற்குரிய சிகிச்சை செய்வது நல்லது.
* என் சித்தப்பாவிற்கு அடிக்கடி சளி பிடித்து கொள்ளும். நாங்கள் காசநோய் என்று நினைத்து தானாகவே மருந்து கொடுத்தோம். சரியாகாததால் மருத்துவரை சென்று பார்த்த போது, அவர் புற்று நோய் என்கிறார். புற்று நோயால் சளி வருமா?
சளி பிடித்து கொள்வது நிறைய காரணங்களினால் ஏற்படும். மருத்துவரை சந்தித்து சளி பரிசோதனை செய்து, அதன் முடிவில் எந்த வகையான நோய் என்று அறிந்து அதற்கு சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தானாகவே காசநோய் என்று நினைத்து மருந்து உட்கொள்வது தவறு. சில வகையான புற்றுநோய்களில் சளி நிறைய உற்பத்தியாகும். எனவே எப்போதுமே எந்த வகை நோய் என்று கண்டுபிடித்து உறுதி செய்த பின் அதற்கு தக்கவாறு சிகிச்சை செய்ய வேண்டும்.
டாக்டர் மா.பழனியப்பன்
நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை
94425 24147.
