கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - மூளையின் உறுத்தல் முக்கிய காரணம்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - மூளையின் உறுத்தல் முக்கிய காரணம்!
PUBLISHED ON : பிப் 24, 2019

வலிப்பு நோய் பாதிப்பு இருப்பவர்கள், வாகனம் ஓட்டலாமா? இந்த சந்தேகம் நிறைய பேரிடம் உள்ளது. வலிப்பு நோய் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டால், இந்த கேள்வியே வராது.
நரம்பு திசுக்களால் உருவானது மூளை. மின் துாண்டுதல்களால் இதன் இயக்கம் நடக்கும். ஒரு ஒயரில் மின்சாரத்தைச் செலுத்தினால், ஒரே சீராக, ஒயரின் உள்ளேயே மின்சாரம் செல்ல வேண்டும்.
அதற்கேற்ற பாதுகாப்பு அம்சங்கள் மின் ஒயரின் வெளிப்புறம் இருக்கும். இல்லாவிட்டால், கட்டுப்பாடு இல்லாமல், எல்லா இடத்திற்கும் மின்சாரம் பரவும்.
மில்லி வோல்ட்ஸ் மின் அதிர்வுகளால் துாண்டப்படும், மூளை நரம்புகளும் மின்சார ஒயர் போன்றவை. மின் கசிவு ஏற்பட்டால் பல இடங்களுக்கும் பரவும் மின்சாரம் போன்று, மூளையில் வரும் உறுத்தல் காரணமாக, கட்டுப்பாடு இல்லாமல் பரவும் மின் துாண்டுதல்களால் வருவது, வலிப்பு நோய்.
சிகிச்சை
வலிப்பு நோயில் பல வகைகள் உள்ளன. நோயின் தன்மைக்கு ஏற்றாற்போல, மாத்திரை, மருந்துகள் கொடுக்கலாம். தொடர்ந்து, மூன்று - ஐந்து ஆண்டுகள் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும்; உறுத்தல் இல்லாமல் மூளை வேலை செய்ய வேண்டும் என்றால், மருந்து பாதுகாப்பு.
இந்த காலகட்டத்திற்கு பின், வலிப்பு வரவில்லை என்றால், பரிசோதனைகள் செய்து, மருந்தின் அளவை குறைத்து வரலாம். மருந்தைக் குறைத்தால், 60 சதவீதம் பேருக்கு, மீண்டும் வலிப்பு வராது; மற்றவர்கள், இன்னும் கூடுதல் காலம் மருந்து சாப்பிட வேண்டியிருக்கும்.
ஒரு தடவை வலிப்பு வந்தால், முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், மீண்டும் வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வலிப்பு நோய் வந்தவர், சிகிச்சை எடுத்தாலும், வலிப்பு வரும் ஆபத்து இருப்பதால், குறைந்தது ஓராண்டு, இரு சக்கர வாகனம் உட்பட எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்பதே, உலகம் முழுவதும் உள்ள விதி.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வது, நீச்சல் அடிப்பது, பாராசூட் பயிற்சி செய்வது கூடாது.
மருந்து சாப்பிட்ட ஓராண்டில் வலிப்பு வரவில்லை என்றால், வாகனம் ஓட்டலாம் என்பது சர்வதேச போக்குவரத்து விதி. ஓராண்டு டாக்டரின் ஆலோசனை, மருந்துகளை முறையாக பின்பற்றி, வலிப்பு வரவில்லை என்றால், மீண்டும் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
வாகனம் ஓட்டுவது தவிர, உங்களால் எவ்வளவு எடை துாக்க முடியுமோ துாக்கலாம்; சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்; திறந்த நிலையில் உள்ள இயந்திரங்களின் அருகில் இருந்து, வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மருந்து சாப்பிட்டாலும், வலிப்பு வந்தால், மருந்தை மாற்ற வேண்டும்; அப்படியும் கட்டுப்பாடு இல்லை என்றால், அறுவை சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்கும்.
துவக்கத்திலேயே மருத்துவ ஆலோசனை பெற்று விட்டால், மருந்தினால் பலன் இல்லாதவருக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்யலாம். நீண்ட நாட்களுக்கு, மூளை உறுத்தல் நிலையிலேயே இருந்தால், உறுத்தல் தன்மையே மூளையின் இயல்பாகி விடும்.
அதன்பின், அறுவை சிகிச்சை செய்தால், எதிர்பார்த்த பலனை தராது. அறுவை சிகிச்சைக்கு பின், சிறிது காலம் மாத்திரையை தொடர வேண்டியிருக்கும்.
மூளை, நரம்பு தொடர்பான பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பாதிப்பு அதிகமாகி விட்டால், எதுவும் செய்ய முடியாமல் போகலாம்.
டாக்டர் கே.ஸ்ரீதர், இயக்குனர், நியூரோ சயின்ஸ் இன்ஸ்டிடியூட்,
எம்.ஜி.எம்., ஹெல்த் கேர், சென்னை.
மொபைல்: 63837 95702, 96005 17646
இ - மெயில்: neurosridhar@gmail.com
