சிறுநீரகக் கல்லுக்கும் கால்சியம் மாத்திரைக்கும் தொடர்பில்லை
சிறுநீரகக் கல்லுக்கும் கால்சியம் மாத்திரைக்கும் தொடர்பில்லை
PUBLISHED ON : ஜன 24, 2020

கால்சியம் மாத்திரை உட்கொள்வதால், சிறுநீரகக் கல் ஏற்படுமா?
பெண்களுக்கு, இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் மாதவிடாய். ஆனால், மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில், உடலில் கால்சியம் சத்து குறைந்து, எலும்பின் அடர்த்தி குறையும். இதற்கு, 'ஆஸ்டியோபோரோசிஸ்' என்று பெயர்.இதனால், எலும்பு எளிதாக உடையக் கூடிய அபாயம் உள்ளது. இது, எந்த அறிகுறியும் வெளியில் தெரியாமல், சத்தம் இல்லாமல் பாதிக்கக் கூடியது. இதன் முதல் வெளிப்பாடே, எலும்பு முறிவாக இருக்கலாம்.கீழே விழுந்த பொருளை எடுக்க குனியும் நேரத்தில், முதுகில் சுளிர் என்று வலி வரும்; அப்போது, எலும்பு உடைந்து விடலாம். எவ்வளவு தான், கீரை, பால், பால் பொருட்கள் தினசரி உணவில் இருந்தாலும், அதில் கிடைக்கும் கால்சியம் போதாது.
எனவே, மாதவிடாய் நின்ற அனைத்து பெண்களும், தினம் ஒரு கிராம் கால்சியம் மாத்திரை எடுக்க வேண்டும். உடலில் கால்சியம் சத்து அதிகமானால், சிறுநீரகக் கல் ஏற்படும் என்று சொல்வது தவறு.சிறுநீரகக் கல்லுக்கும், கால்சியம் மாத்திரைக்கும் தொடர்பில்லை.
இரும்பு, போலிக் அமில மாத்திரைகள் கொடுப்பதைப் போல், கால்சியம் மாத்திரையையும், அரசு தர வேண்டும்.எலும்பு அடர்த்தியை அளப்பதற்கு, பிரத்யேக ஸ்கேன் உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் செலவில், இதை செய்யலாம். அரசு மருத்துவமனையில், ஆயிரம் ரூபாய்க்கு செய்யப்படுகிறது. 50 வயதை எட்டிய பெண்கள், இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
பெண்களுக்குத் தேவை, தங்கள் உடல் குறித்த முழுமையான தெளிவு. எந்த வயதில், என்ன பிரச்னை வரும் என்பது தெரிந்து, அதற்கேற்ப பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் பெற்று, முறையான சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
டாக்டர் டி.தமிழ்ச்செல்வன்,
தலைவர், மூட்டு முடக்குவியல் துறை,
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.
