குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - கேட்பதைக் கொடுத்தால், கேட்காமல் வரும் சர்க்கரை!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - கேட்பதைக் கொடுத்தால், கேட்காமல் வரும் சர்க்கரை!
PUBLISHED ON : ஜூன் 23, 2019

கர்ப்பக் கால சர்க்கரைக் கோளாறால், 20 ஆண்டுகளுக்கு முன், 2 - 4 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்ட நிலை, இன்று பல மடங்கு அதிகரித்து உள்ளது.
கர்ப்பம் தரிக்கும் சமயத்தில், உடல் பருமன் அதிகம் இருப்பது, கருக் குழாயில் நீர்க்கட்டிகள், கணையம் சுரக்கும் இன்சுலின் சேமிப்பு உடலில் குறைவாக இருப்பது ஆகியவை, சர்க்கரைக் கோளாறு ஏற்பட, பொதுவான காரணங்கள்.
கர்ப்பிணி, வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று சொல்லி, விரும்பியதை எல்லாம் சாப்பிட உறவினர்கள் ஊக்கப்படுத்துவர். 30 - 40 ஆண்டுகளுக்கு முன், 15 வயதிற்குள்ளேயே பெண்களுக்கு திருமணம் செய்து விடுவர்; ஊட்டச் சத்து குறைபாட்டுடன் பெண்கள் இருப்பர்.
எனவே, குழந்தை உருவானவுடன், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, விதவிதமாக பலகாரங்கள் செய்து தருவர்.
நவீன மருத்துவ வசதி இல்லாத அந்தக் காலத்தில், பிரசவம் என்பது, பெண்களுக்கு மறுபிறவி; விருப்பப்பட்டு எது கேட்டாலும், சாப்பிடத் தருவதற்கு, இதுவும் ஒரு காரணம்.
'பிள்ளைத்தாய்ச்சி கேட்டால், கொடுக்காமல் இருக்கக் கூடாது' என்ற நம்பிக்கையும் இருந்தது. அதையெல்லாம் பின்பற்ற வேண்டிய அவசியம், இப்போது இல்லை. வழக்கமாக சாப்பிடும் உணவுடன், இரண்டு டம்ளர் பால் கூடுதலாகக் குடித்தாலே, தேவையான ஊட்டச்சத்து கிடைத்து விடும்.
கர்ப்பக் காலத்தில் சுரக்கும் பிரத்யேக ஹார்மோன்களால், இன்சுலின் சுரப்பு குறைந்து, சர்க்கரை அளவு அதிகமாகி விடும்.
குழந்தை பிறந்தவுடன், ஹார்மோன்களின் சுரப்பு, இயல்பான நிலைக்கு திரும்பியதும், இயல்பாக சுரக்கும் இன்சுலின், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப் போதுமானது.
கர்ப்பக் காலத்தில் வரும் சர்க்கரைக் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெண்களில், 50 சதவீதம் பேருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்க்கரைக் கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சர்க்கரை கோளாறு வராமல் தடுக்க, கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஊட்டச் சத்து மிகுந்த, கலோரி குறைந்த உணவுகள் சாப்பிடுவது அவசியம்.
டாக்டர் ஜெய்சித்ரா சுரேஷ்,
பொது நல மருத்துவர், சென்னை.
98400 56946
