குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: குப்பையைப் போல, குண்டும் தெரியவில்லை!
குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: குப்பையைப் போல, குண்டும் தெரியவில்லை!
PUBLISHED ON : டிச 09, 2018

'இத்தனை ஆண்டுகளாக நான் குண்டாகத்தான் இருந்தேன், இப்போது மட்டும் பிரச்னை என்று ஏன் சொல்கிறீர்கள்?' என்று கேட்பவர்கள் உண்டு. இத்தனை ஆண்டுகளாக, சாலையில் குப்பைகளைப் போட்டோம். அதன் மேல் நடந்தோம். ஒரு பிரதமர் வந்து, 'இந்தியாவை சுத்தம் செய்ய வேண்டும்' என்று திட்டம் வரும் வரை, நம்மைச் சுற்றி இருந்த குப்பை தெரியவில்லை. அது போலத்தான் இதுவும்.
பிரச்னை என்று இப்போது தான் புரிகிறது. எல்லா நேரமும், உணவு கிடைக்கும் காலகட்டத்தில், நாம் இருப்பது இன்னொரு காரணம். 50 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான வீடுகளில், ஒரு வேளை அல்லது இரண்டு வேளை தான் சாப்பிடுவர். இப்போது, நாம் மூன்று வேளை சாப்பிடுவதோடு, கூடுதலாக இரண்டு வேளை சாப்பிடுகிறோம்.
இதனால், உடல் பருமன் அதிகரித்து, புதிய புதிய நோய்கள், உடல் பிரச்னைகள் வருகின்றன. 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்கிற சமுதாயப் பிரச்னைகளால், உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று வருகின்றனர். உடல் எடை குறைய, தினமும் ஒரு, 'டயட்' யோகா, உடற்பயிற்சி அறிமுகமாகிறது. இந்த எல்லா முறைகளும் தற்காலிகமாக பலன் தரும். மூன்று மாதங்களில், இத்தனை கிலோ எடை குறைக்கலாம் என்று, அதற்கான, 'டயட்' உடற்பயிற்சி செய்தால், எடை குறையும். குறிப்பிட்ட அளவு எடை குறைந்தவுடன், டயட் உடற்பயிற்சியை விட்டு விட்டால், உடல் பழைய எடைக்கே வந்து விடும்.
'டயட்' உணவின் அளவு, குறைவாக, ருசி இல்லாமல், இருக்கும். ருசிக்காத உணவை, பசி அடங்கியவுடன், நிறுத்தவே தோன்றும். ருசி காரணமாகவே, தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம்.
டாக்டர் வி.பாஸ்கரன்
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை.
baskaran.vasudevan@gmail.com
தொலைபேசி: 9500060130
