PUBLISHED ON : ஏப் 01, 2012

மலக்குடல் புற்று நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.
மலக்குடலில் பிரச்னை ஏற்பட்டு, மலம் தானாக வெளியேறாத நிலை ஏற்பட்டால், செயற்கை மலப் பையுடன் உயிர் வாழலாம் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த வாரம், குடல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகனின் பேட்டி, இப்பகுதியில் வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சி இதோ...
1 கொலாஸ்டமி தேவைப்படும் நோயாளிகளை மனதளவில் எவ்வாறு தயார் செய்கிறீர்கள்?
கொலாஸ்டமி தேவைப்படலாம் என்று சொன்ன உடனே, நோயாளியின் முதல் வார்த்தை, 'வேண்டாம் டாக்டர், 'கொலாஸ்டமி பை' வைத்துக் கொண்டு வாழ்வதை விட நான் இறப்பதே மேல்' என்பதே. ஆனால், ஆபரேஷனுக்கு பிறகு, தன்னால் இயல்பாக வாழ முடியும் என்பதை, இதற்கு முன் இத்தகைய சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளி மூலமாகவும், கொலாஸ்டமி பையை வைத்துக் கொண்டு வாழும் முறையை, சரியாய் சொல்லிக் கொடுக்கும் இத்துறையின் பணியாளர்கள் (ஸ்டோமா தெரபிஸ்ட்) மூலமும் தெரிந்துக் கொண்டு கொலாஸ்டமி செய்துக் கொண்டு, இயல்பாய் வேறு எந்த உபாதையும் இன்றி, வாழ ஆரம்பித்த பின் இவர்களே, கொலாஸ்டமி தேவைப்படும் மற்ற நோயாளிகளுக்கு, கவுன்சிலிங் கொடுக்க முன் வருகின்றனர். இதற்காகவே, அரசின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட, 'பேஷன்ட் சப்போர்ட் ஆர்கனைசேஷன்' இருக்கிறது. அதில் உள்ள, 'பேஷன்ட் வாலன்ட்டியர்கள்' சிகிச்சைக்கு முன், தங்களுக்கு இருந்த மனோநிலையையும், கொலாஸ்டமிக்கு பின் தங்களின் மனோநிலையையும், ஆபரேஷன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சொல்லி, சுலபமாக புரிய வைக்கின்றனர். இதனால், நோயாளிகள் நம்பிக்கையுடன் சிகிச்சையை ஏற்றுக் கொள்கின்றனர்.
2 மலக்குடல் புற்று நோய் மற்றும் கொலாஸ்டமி பற்றி மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்து?
புற்று நோய் ஒருவருக்கு வர வேண்டாம். அப்படியே வந்தாலும், ஜீரண மண்டலத்தின் மற்ற உறுப்புகளைக் காட்டிலும், மலக்குடல் புற்றுநோய் பல ஆண்டுகள் உயிருடன் வாழும் வாய்ப்பை கொடுக்க வல்லது என்பதால், சற்றே நிம்மதி அடையலாம். மலக்குடல் ஆரம்ப நிலையிலிருந்தால், குடலை கொலாஸ்டமி இன்றியே இணைத்து விட முடியும். அதையும் மீறி முற்றிய நிலையில் வந்தாலும், கீமோதெரபி, ரேடியேஷன் மூலம் கட்டியை கரைத்து சரி செய்ய முடியும். அதற்கும் மேல் சிக்கல் இருந்தாலும், தற்காலிக கொலாஸ்டமி மூலம் சரி செய்துவிட முடியும். இவை எல்லாவற்றையும் மீறி, நிரந்தர கொலாஸ்டமி தேவை என்ற நிலை வந்தாலும், முன்பிருந்த காலங்களைப்போல், பை கூட இல்லாதநிலை அல்லாமல் நல்ல வாசனை நிறைந்த, சுலபமாய் மாற்றிக்கொள்ளக் கூடிய காற்றுப்புகாத கொலாஸ்டமிபை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் வந்து விட்டது. எனவே, வியாதி வந்து விட்டது என்றாலும், விஞ்ஞான தொழில்நுட்பம் இன்று நோயின் கடுமையை இந்தளவிற்கு கட்டுப்படுத்திபோக்குகிறது என்பதை நினைத்து நாம் நிம்மதியடையலாம். நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்து கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.
3 கொலாஸ்டமிக்கு பின்பு ஒரு நோயாளி இயல்பாக எப்பவும் போல் வாழ முடியுமா?
கொலாஸ்டமிக்கு பின்பு ஒருவர் நடனமாடலாம், ஜாகிங் போகலாம், பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொள்ளலாம். எந்த வித்தியாசமும் இன்றி இயல்பாய் வாழ்க்கை நடத்தலாம். அவர்களாய் சொன்னாலொழிய மற்றவர்கள், அவர் கொலாஸ்டமி செய்யப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் கூறினார். சென்னையில், 'ஸ்டோமாகேர்.கோ.இன்' என்ற வெப்-சைட்டை இயக்குபவர்கள், 'கொலாஸ்டமி' பை விற்பனை செய்கின்றனர். அதோடு, இந்த பாதிப்பில் உள்ளவர்களை மன ரீதியாகத் தயார் செய்து, தேவைப்படும் நேரங்களில், பை மாற்றிப் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
