PUBLISHED ON : டிச 21, 2019

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பீட்சா, பர்கர் போன்ற, அனைத்து துரித உணவுகளிலும், தேவைக்கு அதிகமான உப்பு, செரிவூட்டப்பட்ட, கரையாத கொழுப்பு, சர்க்கரை இருப்பதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பரிசோதனை கூடத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக செய்த பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், உப்பு, கொழுப்பு நிறைந்த துரித உணவுகள், குறைந்த விலையில், எளிதாக கிடைப்பது என்ற பல காரணங்களால், 40 வயதிற்குள், ரத்தத்தில் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, உடல் பருமன், இதய நோய்கள் அதிகரித்து இருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, குடல், இரைப்பை மருத்துவ ஆலோசகர், டாக்டர் தீபக் சுப்ரமணியம் கூறும் போது, 'நாற்பது வயதிற்குள்ளேயே இது போன்ற உடல் கோளாறுகள் ஏற்படும் போது, அடுத்த, 30 ஆண்டுகள், இவைகளுடனேயே வாழ வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.
உணவுப் பழக்கத்தால் அதிகரித்த உடல் பருமனை குறைப்பது, எளிதான காரியம் இல்லை.'முழு ஈடுபாடும், அர்ப்பணிப்பும் திட்டமிட்ட உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் மட்டுமே, இது சாத்தியம்.
'இதில் சவாலான இன்னொரு விஷயம், குறைத்த உடல் எடையை அதிகரிக்க விடாமல், அப்படியே வைத்திருப்பது. சர்க்கரை கோளாறு உட்பட, வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு, தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயமும் உள்ளது' என்றார்.
கொழுப்பு அதிகம்
'உணவுப் பழக்கத்தால், இளம் வயதினரிடையே, ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, கொழுப்பு அதிகரிப்பது, கடந்த ஆண்டுகளில், 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக அதிகரித்து உள்ளது' என்று கூறும் செரிமான மண்டல அறுவை சிகிச்சை மருத்துவர், பட்டா ராதாகிருஷ்ணன், 'பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பெரும்பாலும் காலை, மாலை இரு வேளை தவிர, கேட்கும் நேரங்களில் எல்லாம், 'சிப்ஸ், பிஸ்கட், கேக்' என்று பெற்றோர் வாங்கித் தருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அவர்களின் வேலை எளிதாகிறது என்பது.
பார்வை மங்கலாக தெரிகிறது என்று சொன்ன, என் குடும்ப நண்பரின், 10 வயது மகனை என்னிடம் அழைத்து வந்தனர்; பரிசோதித்ததில் அவனுக்கு உயர் ரத்தம் அழுத்தம் இருந்தது. பெற்றோரிடம் சொன்னதும், 'குழந்தைக்கு எப்படி பிரஷர் வரும்?' என்று, என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.
'பாதி சாப்பிட்ட சிப்ஸ் பாக்கெட்டை, 'டிரவுசர்' பாக்கெட்டில் வைத்திருந்தான் பையன். அவனது உணவுப் பழக்கத்தைக் கேட்டால், தலை சுற்றும்.
'இதெல்லாம் மிகவும் ஆபத்து. இதய நோய் வருவதற்கான வாய்ப்பு இவனுக்கு அதிகம்' என்று இரண்டு மணி நேரம் விளக்கினேன்' என்றார்.பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் இருப்பது, 2012ம் ஆண்டில், இதே மையம் செய்த ஆய்விலேயே உறுதியானது.
கடந்த ஏழு ஆண்டு களாக, இந்தியாவில் விற்கப்படும், 33 முன்னணி நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
இதில், சிப்ஸ் மற்றும் அதைப் போன்று மொறுமொறுப்பாக உள்ள தின்பண்டங்களில், அதிக அளவில் உப்பு உள்ளது. 'இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ்' மற்றும் சூப் வகைகளில், மிக அதிக அளவில் உப்பு சேர்க்கப்பட்டு உள்ளது.
'ஆரோக்கியமானது' என்று கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் விளம்பரங்களில் சிபாரிசு செய்யும், 30 கிராம் சிப்ஸ்களில், குறைந்தது, 1 கிராம் உப்பு உள்ளது.
ஆரோக்கியம் இல்லாததை, ஆரோக்கியம் என்று விளம்பரம் செய்கின்றனர். பச்சை காய்கறிகள், கீரைகளில் இயற்கையிலேயே நம் உடலின் தேவைக்கு ஏற்ற உப்பு உள்ளது. இதை அந்த அந்த ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.ஊட்டச்சத்து
'ரெடிமேட்' உணவுப் பொருட்களை வாங்குவதற்கு முன், அதில் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து விபரங்களை படித்தாலே, இதைப் புரிந்து கொள்ள முடியும். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், 30 கிராம் சிப்ஸ் பாக்கெட்டை, 20 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் இலவசமாக, மேலும், 20 கிராம் சேர்த்தும் தருகின்றனர். ஆக, மொத்தமாய் அள்ளிச் சாப்பிட்டு விடுகிறோம்.
மிக்சர், காராபூந்தி, முறுக்கு, சேவு போன்ற அனைத்து வகைகளிலும் அதிக உப்பு, கொழுப்பு அல்லது இரண்டும் உள்ளது.
'மீடியம்' அளவில் 'ஆர்டர்' செய்யும் ஒரு பீட்சாவில், நாள் முழுவதும் நம் உடலுக்குத் தேவையான உப்பில், 99.9 சதவீதமும், 72.8 சதவீதம் கொழுப்பும் உள்ளன.
நுாடுல்ஸ்
பதினைந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், ஒரு வாரத்தில் குறைந்தது, மூன்று அல்லது நான்கு முறை, 'இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ்' சாப்பிடுகின்றனர். 70 கிராம் பாக்கெட்டில் மட்டும் குறைந்தது, 2.7 கிராம் உப்பு உள்ளது.
இந்த விஷயம் அனைத்தையும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய ஆய்வு தெரிவிக்கிறது.
உப்பும், சர்க்கரையும்!
உலக சுகாதார மையம், இந்திய மருத்துவக் கவுன்சில் உட்பட தேசிய, சர்வதேச அமைப்புகள், ஒரு நபர் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய அளவை பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, உப்பு, 5 கிராம், கொழுப்பு, 60 கிராம், கார்போ ஹைட்ரேட், 500 கிராம், 'டிரான்ஸ் பேட்' எனப்படும் கரையாத கொழுப்பு, 2.2 கிராம் உட்கொண்டால் போதுமானது. இந்த அளவைக் காட்டிலும் கூடுதலாக சாப்பிடுவது, உடல் பருமன் உட்பட, நோய்களையே உண்டாக்கும்.இத்துடன், புரதம், விட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் அடங்கிய சமச்சீரான உணவு, ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு, 2,000 கலோரி போதுமானது.

