அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு!
அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு!
PUBLISHED ON : டிச 22, 2019

'ஆர்த்ரடீஸ்' எனப்படும், முழங்கால், மூட்டு தேய்மானத்திற்கு, அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. தற்போது, அவரவர் ரத்தத்தில் இருந்தே, மூல செல் எனப்படும், 'ஸ்டெம் செல்'லை பிரித்தெடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்துவதன் மூலம், அறுவை சிகிச்சை இல்லாமல், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது.
ரத்தத்தில் இருந்து, ஸ்டெம் செல்லை பிரிக்கும் தொழில்நுட்பம் இல்லாததால், குழந்தை பிறந்ததும், தொப்புள் கொடியிலிருந்து ரத்தத்தை எடுத்து, எதிர்காலத்தில் உடல் கோளாறுகள் வந்தால் பயன்படுத்தலாம் என்று, சேமித்து வைக்கிறோம்.
இனி, இது அவசியம் இல்லை. தேவைப்படும் சமயத்தில், அவரவரின் ரத்தத்தில் இருந்தே, ஸ்டெம் செல்லை பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்.
இத்தொழில்நுட்பம், கடந்த, 10 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது; இரண்டு ஆண்டுகளாக, சென்னையிலும் இந்த முறையில் சிகிச்சை செய்து வருகிறோம்; ஸ்டெம் செல்லை செலுத்தி, பல நோய்களுக்கு தீர்வு காண முடியும்.
ரத்தம், எலும்பு மஜ்ஜை, கொழுப்பு என்று பல வழிகளிலும், ஸ்டெம் செல்லை பிரித்தெடுக்க முடியும். அமெரிக்கா, மெக்சிகோ, லண்டனில் இதற்கான சிறப்பு பயிற்சியை எடுத்துள்ளேன்; தொடர்ந்து எடுத்து வருகிறேன்.
செல்கள் பிரிப்பு
ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் உள்ளே, வளர்ச்சி ஊக்கியான ஸ்டெம் செல்கள் உள்ளன. 30 மில்லி ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்களை பிரித்தால், 3 மில்லி ரத்தத்தில் சராசரியாக, 100 ஸ்டெம் செல்கள் இருக்கும். ஸ்டெம் செல் அடங்கிய இந்த ரத்தத்தை உடனடியாக, நோயாளிக்கு ஊசி மூலம் செலுத்தி விடுவோம்.
இரண்டு மணி நேரத்தற்குள் முடியும் சிகிச்சையை, புற நோயாளியாகவே செய்து கொள்ளலாம். மூட்டு தேய்மானம் இருக்கும் எந்த வயதினரும், இதைச் செய்ய முடியும்.
ஸ்டெம் செல்லை நாம் சோதனைக் கூடத்தில் வளர்க்க, சர்வதேச அளவில் எங்குமே அனுமதி இல்லை. ஒருவரிடமிருந்து, ஒரு முறை எடுக்கும் ரத்தத்தில், 100 செல்கள் இருந்தால், அதை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இளம் வயதினராக இருந்தால், அதிக ஸ்டெம் இருக்கும். வயது கூடும் போது, செல்களின் எண்ணிக்கை குறையத் துவங்கலாம். ஆரம்ப நிலை, மத்திய நிலையில் இருப்பவர்களுக்கு, ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனைத் தரும்.
ஆர்த்ரடீஸ் எந்த நிலையில் இருக்கிறது; எவ்வளவு ஸ்டெம் செல் செலுத்தி உள்ளோம்; நோயாளியின் வயது, இவற்றைப் பொருத்தே, அழிந்த செல்கள் வளர்ச்சி பெறுவதற்கு, மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.
ரத்தம் தவிர, எலும்பு மஜ்ஜை, நல்ல கொழுப்பிலும், இந்த செல்கள் உள்ளன. கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள், நல்ல பலனைத் தரும். காரணம், இவை புதிதாக இருக்கும்; வயிறு, தொடை, இடுப்பின் பின் பக்கம் என்று, உடம்பின் எந்த பகுதியில் இருந்தும், தேவையான அளவு எடுக்க முடியும்.
ஆர்த்ரடீஸ் தவிர, எலும்பு முறிவு, ஆறாத புண் இருக்கும் இடத்தில், இந்த செல்களை செலுத்துவதால், அந்த இடத்தில் புதிய செல்கள் உருவாகி, புண் ஆறும். அழியும் செல்களில், புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.
தலைமுடி வளர்ச்சிக்கு, தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு, நீண்ட நாட்களாக புண் ஆறாமல் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு என்று, அனைத்து துறை நிபுணர்களும், இந்த ஸ்டெம் செல் செலுத்தும் முறையை, தற்போது பயன்படுத்த துவங்கி உள்ளனர். ரத்த புற்று நோய் தவிர, மற்ற கேன்சர் வகைகளுக்கும், இந்த முறை பலன் தரும்.
டாக்டர் லட்சுமி நாதன்
எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
ரீஜென் ஆர்த்ரடீஸ் மையம், சென்னை
044 - 2440 0888; 98844 88288

