PUBLISHED ON : டிச 21, 2019

குளிர் காலத்தில், கை, கால் வலி, எலும்புகளில் வலி அதிகமாகும். இதற்கு காரணம், இந்தப் பருவத்தில் வாதம் அதிகமாகி, எலும்பு மூட்டுகளில் சேர்வதால், காலை எழுந்தவுடன், கை, கால்கள் மரத்து போவது, கால் மூட்டுகளை மடக்க சிரமப்படுவது, கைகள் இறுக்கம், கழுத்தை திரும்புவதில் சிரமம் ஏற்படலாம்.
இதற்கு, ஓமம், கருஞ்சீரகம், சீரகம் இந்த மூன்றையும் வறுத்து, பொடியாக்கி, வைத்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை அல்லது தேவையான நேரத்தில், இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, பாதியாகும் வரை காய்ச்சி, ஆற வைத்து, இத்துடன் சிறிது பெருங்காயத்தையும் சேர்த்து கலந்து குடித்தால், உடலுக்கு தேவையான உஷ்ணம் கிடைக்கும். வாயுக்கள் உடம்பில் இருந்து வெளியேறத் துவங்கும்.கால் நரம்புகளில் ஏற்படும், 'வெரிகோஸ்' பிரச்னைக்கு, இரவில் கடுகு எண்ணெய் தேய்த்தால், ரத்த ஓட்டம் சீராகி, வலி குறையலாம். மூட்டுகள், கழுத்தில் இறுக்கம் இருந்தால், சுக்கு பொடியை, சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து, இரவு முழுவதும் பற்று போட்டால், இறுக்கம் குறைந்துவிடும்.தினசரி உணவில், பூண்டு, இஞ்சி, ஏலம், பட்டை, கிராம்பு இவற்றை அதிகம் சேர்க்கலாம். இரவு உணவு, எளிதில் செரிமானம் ஆகக் கூடியதாக இருந்தால் நல்லது.
குழந்தைகளுக்கு...சளி, இருமல் இருந்தால், மூன்று பல் பூண்டடை அரைத்து, அரை டம்ளர் பால், அரை டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியானதும், ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை மிளகு துாள் கலந்து, காலை, மாலை வேளையில் கொடுத்தால், சளி முழுவதும், மலத்திலேயே வெளியேறி விடும்.பூண்டில், நடுவில் இருக்கும் மெல்லிய நரம்பை அகற்றி விட வேண்டும். செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
டாக்டர் பாரத் விஸ்வான்
ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை- 98840 80182, 183

