PUBLISHED ON : டிச 21, 2019

மதுரையில் பிறந்தவர், சுந்தர் பிச்சை. 'கூகுள்' நிறுவனத்தின் தாய் நிறுவனமான, 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இவர், கரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். கடந்த, 2004ம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2015ல், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியானார்.
கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் இருவரும், ஆல்பபெட் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கூகுள் மற்றும் ஆல்பபெட்டின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.'கூகுள் குரோம்' என்ற தேடுதல் இணையத்தை, 'நம்பர் - 1' ஆக மாற்றினார். தற்போது, கூகுள் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு, நிலைமை மாறி விட்டது.'அதிகாலையில் எழுந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதில்லை...
நான், 7:00 மணிக்கு தான் எழுந்திருப்பேன்.'இனிப்பு பிடிக்காது என்பதால், பாயாசம் கொடுத்தாலும், அதில் கொஞ்சம் சாம்பாரைக் கலந்து கொள்வேன்; அலுவலகத்தில், நடந்து கொண்டே இருப்பேன்...' என்பது போன்ற, பல சுவாரஸ்யங்களை, அவ்வப்போது பகிரும் சுந்தர் பிச்சை, 'ஆர்ட்பிஷியல் இன்டலிஜென்ஸ் - ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு குறித்து பேசியதிலிருந்து:ஏ.ஐ., மையங்களை, உலகம் முழுவதும் திறக்க உள்ளோம். அதனுடைய பலன், ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஏ.ஐ., மையங்கள், அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. இதில், மருத்துவம் முக்கிய இடத்தை பெறப் போகிறது.
கடந்தாண்டு, சர்க்கரை கோளாறால், விழித்திரையில் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வை இழப்பை உண்டாக்கும், 'டயாபடிக் டெனோபதி' குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்தோம்.இதைப் பற்றி முழுமையான தகவல்களை அளித்தால், பிரச்னையை முன்கூட்டியே கணித்து, தேவையான சிகிச்சை, முன்னெச்சரிக்கையை, டாக்டர்களால் செய்ய முடியும் என்று தெரிந்ததும், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சங்கரா மருத்துவமனைகளுடன் இணைந்து, களப் பணிகளை செய்து வருகிறோம்.
டாக்டர்கள் இல்லாத பகுதிகளில், பயிற்சி பெற்ற டாக்டர்களை நியமித்து, பரிசோதனை செய்கிறோம். விழித்திரை ஸ்கேன் பரிசோதனையில், கண்கள் தவிர, வேறு ஏதேனும் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதா என்று, எந்த டாக்டராலும் கணிக்க முடியாது.ஆனால், செயற்கை நுண்ணறிவு கொண்ட கூகுள் இயந்திரம், அதை செய்யும்; அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதய, ரத்த நாளங்களில் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதா என்று, கணித்து சொல்லி விடும். இதற்கான ஆய்வை செய்து, கட்டுரையை தயாரித்து உள்ளோம். இது தொடர்பான கள ஆய்வை, கூகுள் செய்து வருகிறது.
நாங்கள் கவனம் செலுத்த உள்ள இன்னொரு விஷயம், 24 - 48 மணி நேரத்திற்கு பின், நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட உள்ள மாற்றங்களை, முன்கூடடியே கணித்து சொல்லும் திறனுடன், ஏ.ஐ., செயல்படும்.நோயாளியின் நிலை, அடுத்த சில மணி நேரத்தில், எப்படி மாறும், மாறலாம் என்பதை கணிப்பது மட்டுமல்லாமல், இதே நிலையில் இருந்த வேறு நோயாளிகளின் நிலைமை எப்படி மாறியது என்பதை ஒப்பிட்டு சொல்லும் திறனும், இதில் இருக்கும்.
குறிப்பிட்ட உடல் கோளாறால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளின் விபரங்கள், நிமிடத்தில் டாக்டருக்கு கிடைக்கும். இதற்காக, முன்னணி மருத்துவ மையங்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.

