PUBLISHED ON : டிச 20, 2019

* சர்க்கரை நோய் எப்படி ஏற்படுகிறது?
மனித உடலில், வயிற்றுப் பகுதியில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்கு தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இன்சுலின் அளவு குறையும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத் தான் சர்க்கரை நோய் என்கிறோம்.
* யாருக்கெல்லாம் வரும்?
பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும் வரலாம். 40 வயதை தாண்டிய அனைவரும் சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்போதைய கணக்கெடுப்பின் படி, லட்சத்தில் 37 குழந்தைகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் 22 முதல் 25 சதவீதம் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர 2025ல் சீனாவை முந்தி இந்தியா தான் நம்பர் ஒன்' ஆக வரப்போகிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
* குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோய் குறித்து...
இதில் இருவகை உள்ளது. முதல்வகை, இன்சுலின் சுரப்பு அறவே இருக்காது. இவர்களுக்கு இன்சுலின் வெளியில் இருந்து செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 5 முதல் 6 நாட்களில் இறப்பு நேரிடும்.
இரண்டாவது வகையினருக்கு, இன்சுலின் சுரக்கும் ஆனால், போதுமான அளவு சுரக்காது. அப்போது, அவர்கள் இன்சுலின் கூடுதலாக சுரக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அறிகுறிகள் என்ன
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு, அடங்காத தாகம், உடல்சோர்வு, அசதி, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு, எடை கூடுதல், குறைதல், தோல் அரிப்பு, சிறுநீர் தொற்று அறிகுறிகள்.
* நகர அவசர வாழ்க்கையால் சர்க்கரை நோய் வருகிறதா?
கிராம மக்களுக்கும் இப்போது அதிகம் வருகிறது. காரணம், விவசாயமும், உடல் உழைப்பும் குறைந்து வருகிறது. அப்போதைய விவசாயிகள் செய்யும் வேலையில், பாதி வேலை கூட இப்போதைய கிராம மக்கள் செய்வதில்லை. எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் அதிகம் கிராம மக்களே உள்ளனர். சங்க காலத்திலேயே சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. இலக்கியத்திலேயே 'மதுமேகம்' என்று குறிக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்தில், பணக்காரர்களுக்கான நோய் என அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் இன்று பாமரனுக்கும் வருகிறது. காரணம், உணவுமுறையும், உடல் உழைப்பு இல்லாததுமே. உழைப்பும், முறையான உணவுமே சர்க்கரை நோய்க்கு மருந்து.
* சர்க்கரை நோயால் உண்டாகும் பாதிப்பு?
உச்சி முதல் உள்ளங்கால் வரை பிரச்னை ஏற்படும். முடி உதிர்தல், உடல் எடை குறைதல், பற்கள் விழுதல், வலியில்லாத மாரடைப்பு, செரிமானக்கோளாறு, தாம்பத்ய உறவில் கோளாறு, கிட்னி பாதிப்பு, கண்களில் ரெட்டினா, ஆறாத புண் போன்றவை ஏற்படும்
* எவ்வாறு தடுப்பது
ஆரோக்கிய உணவு முறை, உடற்பயிற்சி அவசியம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உணவு முறைகளை எப்படி கையாளுவது?
தென் மாநிலங்களில் சர்க்கரை நோய் அதிகம் உள்ளது. காரணம் உணவு முறை. வடமாநிலத்தவர் புரோட்டின் உணவுகளை அதிமாகவும், கார்போஹைட்ரேட் உணவை குறைவாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். நாம் கார்போஹைட்ரேட் உணவை அதிகமாக எடுத்துக்கொள்கிறோம். புரோட்டினை மிகக்குறைவாக எடுத்துக் கொள்கிறோம். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் மணிவண்ணன்சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்காரைக்குடி 94866 16388

