PUBLISHED ON : அக் 07, 2018

* தடுப்பூசி போட்டால் புற்று நோய் வருமா?
இது ஒரு தவறான கருத்து. தடுப்பூசி போடுவதற்கும், புற்று நோய் வருவதற்கும் சம்பந்தம் கிடையாது. தடுப்பூசி போட்ட இடத்தில் ஒரு சிலருக்கு புற்றுநோய் வருவது இயற்கையான மாறுதல் மட்டுமே. தடுப்பூசி போடாமல் இருந்திருந்தாலும், அவர்களுக்கு அந்த இடத்தில் புற்றுநோய் வந்திருக்கக்கூடும்.
* புற்றுநோய்க்கு தடுப்பூசி உண்டா?
எல்லா வகையான புற்று நோய்களுக்கும் தடுப்பூசி கிடையாது. ஆனால், கல்லீரல் மற்றும் கருப்பை வாய்புற்று நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது. கல்லீரல் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இரண்டு மூன்று தவணையில் போட்டுக் கொள்ள வேண்டும். கருப்பை வாய்ப்புற்று நோய்க்கு, முதல் தாம்பத்திய உறவிற்கு முன் போட்டுக் கொள்ள வேண்டும்.
* நான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் கீமோ தெரபி எடுத்து வருகிறேன். எனக்கு ரத்த நாளங்கள் கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் மிகவும் அவதிப்படுகிறேன். இதற்கு ஏதேனும் மாற்று வழி உண்டா?
கீமோதெரபி எடுத்து வருபவர்கள் இப்போது கீமோ போர்ட் எனப்படும் ஒரு உபகரணத்தை உடலில் பொருத்தி கொள்வதன் மூலம் மிக எளிதா மருந்தை உடலில் செலுத்தி கொள்ளலாம். ரத்த நாளங்களை குத்த வேண்டிய அவசியமே ஏற்படாது.
* எனது நாக்கில் ஒரு புண் ஏற்பட்டு வெகு நாட்களாக ஆறாமல் இருந்து வருகிறது. அதை பரிசோதித்த மருத்துவர்கள் புற்று நோய் எனக்கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். அறுவை சிகிச்சைக்கு பின் என்னால் நன்றாக பேசவும் சாப்பிடவும் முடியுமா?
நாக்கில் புறறுநோய் பாதிப்பு ஏற்பட்டபின் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. அதற்குப்பின் ஒட்டுறுப்பு சிகிச்சை மூலம் நீங்கள் நன்றாக சாப்பிடவும், பேசவும் முடியும். நீங்கள் அறுவை சிகிச்சைக்கு பயந்தால் மாற்றாக கதிரியக்க சிகிச்சை செய்து கெண்டாலும் நாக்கு புற்று நோயைக் குணப்படுத்த முடியும்.
* எனக்கு ஒரு பக்கம் ஆண் விரையில் புற்று நோய் ஏற்பட்டு அதற்காக கீமோ தெரபி எடுத்துள்ளேன். நான் இப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆண் விரை புற்றுநோய் முழுவதும் குணப்படுத்தக்கூடிய நோய். அதற்கு தற்பொழுது உபயோகப்படுத்தப் மருந்துகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகவே நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* நான் 20 வயது முதல் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளேன். இப்பொழுது எனக்கு 40 வயதாகிறது. தற்போது வயிற்றில் அதிக வலியும், பசியின்மையும் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா
மதுப்பழக்கத்தினால் சர்க்கரை, கணைய, புற்று நோய் போன்ற பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மதுப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு மருந்துகளும், மனநல சிகிச்சைகளும் உள்ளன. நீங்கள் அவற்றை மேற்கொண்டு மதுப்பழக்கத்தில் இருந்து முழுமையாக மீண்டு வரலாம்.
இ சிகரெட் என்பது புகையிலை பிடிப்பவர்களுக்கு ஒரு மாற்று சாதனம். அதை உபயோகித்தாலும் சிகரெட் பிடிப்பதினால் ஏற்படும் தீமைகளில் பெரும் பங்கு ஏற்படக்கூடும்.
- டாக்டர் மோகன் பிரசாத்,
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,
மதுரை.
98430 50822
