தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முதலுதவி பெட்டி

முதலுதவி பெட்டி

முதலுதவி பெட்டி


PUBLISHED ON : செப் 09, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலைபேசி, 'டிவி, ஏசி' என, வீட்டிக்கு தேவையான அனைத்தையும் வைத்திருக்கும் வீடுகளில், குடும்ப மருத்துவர் என்பவர் ஒருவர் இருக்கமாட்டார்; அதேபோல், முதலுதவிப் பெட்டியும் இருப்பதில்லை. இதற்கு காரணம், அலட்சியம் மட்டுமே. ஆபத்து எந்த நேரத்திலும் ஏற்படலாம். வீடுகளில் கழிப்பறை எவ்வளவு அவசியமோ, அதேபோல் முதலுதவி பெட்டியும் அவசியம்.

முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

கிருமிநாசினி: உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்க, அடிபட்ட இடத்தில் தடவுவதற்கு, கிருமிநாசினி அவசியம் வேண்டும். சிறு குழந்தைகள், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை, சொல்லாமலே கழித்துவிடுவர். அப்போது, அந்த இடத்தை துடைத்தால் மட்டும் போதாது; தண்ணீரில் கிருமிநாசினி கலந்து, அந்த இடத்தில் தெளித்து நன்றாக துடைத்தால், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாது.

பாராசிட்டமால்: தலைவலி, உடல்வலி மற்றும் சாதாரண காய்ச்சலுக்கு, எப்போதாவது, 'பாராசிட்டமால்' மாத்திரையை பயன்படுத்தலாம். இரண்டு வேளை 'பாராசிட்டமால்' எடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மறுபடியும் 'பாராசிட்டமாலை' எடுத்துக் கொள்வது நல்லது அல்ல. ஆனால், முதலுதவி பெட்டியில் இதுவும் இருக்க வேண்டும்.

காயங்கள்: காயமடைந்தால், அதை சுத்தப்படுத்துவதற்கு, போவைடீன் அயோடைன் மருந்து அவசியம் வேண்டும்.

தீக்காய மருந்து: தீக்காயம் ஏற்படும்போது, முதலில் குளிர்ந்த நீரில், காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். பின், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரணம், தீக்காயம் ஏற்படும்போது உடலில் நீர்ச்சத்து குறையும். தீக்காயம் பட்டதும், 'சில்வர் சல்பாடையாசின்' உள்ள களிம்புகளை காயத்தின் மேல் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீக்காயங்களுக்கு, மருத்துவமனை செல்வதே நல்லது.

மாரடைப்பு: மாரடைப்பு மற்றும் இதயத் தசைகளுக்கு ரத்தம் பாய்வது தடைபடுவது அல்லது மாரடைப்பு வரும் என, அறிகுறிகள் தென்படும்போது, 'ஐசோசார்பைடுடைநைட்ரேட்' 10 மி., கிராம் சாப்பிட்ட பின், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்லது. இம்மாத்திரைகள், ரத்த குழாய் அடைப்புகளை சற்றே தளர்த்தும்.

ஒவ்வாமை: பூச்சிக்கடி, சாப்பிட்ட உணவு நச்சு ஆகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளுக்கு, 'லிவோசிட்ரிசன்' மருந்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பஞ்சு: காயங்கள், தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, போன்றவை ஏற்பட்டால், அந்த காயங்களுக்கு பழைய துணிகளில் துடைத்து கட்டுப் போடுவதால், தெரிந்தே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி கிருமிகளை உடலுக்குள் நுழைய அனுமதி கொடுக்கிறோம். எனவே, மேற்சொன்ன பிரச்னைகளுக்கு பஞ்சை பயன்படுத்தியவுடன், உடனடியாக குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்.

பேண்டேஜ்: எதிர்பாராமல் ஏற்படும் சிறு விபத்துகள் மற்றும் காயங்களுக்கு, பேண்டேஜ் போட வேண்டி வரும். அப்போது, கிருமி நாசினி உதவியோடு, காயப்பட்ட பகுதியை துடைத்த பின், பேண்டேஜ் போடுவது நல்லது. அவற்றை முதலுதவி பெட்டியில் வாங்கி வைப்பது நல்லது.

கையுறைகள்: மருத்துவம் சம்பந்தமான வேலை செய்யும் மருத்துவ பொருட்களை கையாளுவதற்கு, தரமான கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது. கையுறை அணிவதால், கைகளில் உள்ள அழுக்குகள் அடுத்தவருக்கு பரவாது.

கத்தரிக்கோல்: காயம்பட்ட நேரத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்டேஜ் மற்றும் மருந்து பொருளின் கவர்களை கத்தரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்தரிக்கோல் அவசியம்.

குறிப்பு: உயர் ரத்த அழுத்தத்திற்கு, வீட்டில் அவசரத்திற்கு மருந்துகள் கொடுக்கக் கூடாது. கண்டிப்பாக, மருத்துவரின் ஆலோசனை பெற்றே சிகிச்சை பெற வேண்டும்.

த.தமிழ்ச்செல்வன்,

பொது நலமருத்துவர்,

மெட்லைப் மெடிக்கல் சென்டர், சென்னை.

போன்: 98401 60706

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us