PUBLISHED ON : நவ 27, 2016

பருவமழை துவங்கியுள்ள சூழலில் சளி, இருமல் என்பது இயல்பாக அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பு. குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், அடிக்கடி இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.
ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.
சில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப் பிரச்னைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா (சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று.
இது ஒரு ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. பிறந்தது முதல், 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால் கொடுப்பது, ஆரோக்கியமான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதன் மூலம் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த முடியும்.
ஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ் (எலும்புருக்கி நோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும் நோய்தொற்று.
இருமல், சளி, மூக்குவடிதல் அல்லது தொண்டைப்புண் ஆகியவை இருந்தாலும், சாதாரணமாக சுவாசிக்கின்ற குழந்தைகளை, வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கலாம். அவர்கள் மருந்துகள் இன்றியே குணமடைவர். அவர்களை மிதமான வெப்ப சூழலில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமான சூழலை தடுக்க வேண்டும். மேலும், அதிக அளவு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே, மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

