PUBLISHED ON : நவ 27, 2016

நவீனமயமாதலின் பயணங்களில், நாம் மறந்து வரும் பழக்கங்களில், மருதாணி வைப்பதும் ஒன்று. இதற்கு பதிலாக, ரசாயன வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும், மெஹந்தியை உபயோகிக்க துவங்கியுள்ளோம். இது தவறான செயல். ஏனெனில், ரசாயனங்களின் கலவை அதிகம் இருப்பதால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
மருதாணி என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இதை கைகளில் வைக்கும் போது, உடல் குளிர்ச்சியடைந்து, மனம் மகிழும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மருதாணி இலையை அரைத்து வைக்கும்போது வீசும் வாசத்துக்கு, நேர்மறையான கதிர்கள் இருப்பதால், அவை நம் மனதுக்குள் செல்கிறது.
ரசாயன கலவைகளை தவிர்த்து, இயற்கையான மருதாணி இலையை பயன்படுத்துவது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. மருதாணியை அரைத்து கைகள் மற்றும் உள்ளங்காலில் வைப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நிகழ்வுகள், நம் உடலுக்குள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று, அழகுக்காக கை, கால்களில் மருதாணி இட்டுக் கொள்வது.
முற்காலத்தில் மருதாணி மரத்தின் இலையை அரைத்து நேரடியாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அதே இலைகளை உலர்த்தி பதப்படுத்தியும், பலவகைகளில் பயன்படுத்துகின்றனர். பச்சை இலைகளை அரைத்து, நேரடியாக மருதாணி இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. அதே இலைகளை நிழலிலேயே உலர்த்தி பொடி செய்து மெல்லிய துணியால் சலித்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் தேவையான நேரத்தில், மருதாணி பேஸ்ட் தயாரிக்கலாம். முதலில் பேப்பரில் கோன் போல் செய்து, அல்லது கைகளில் உங்களுக்கு தெரிந்த டிசைன்களை கோலம் போடுவது போல் போட்டு, பயிற்சி பெற வேண்டும்.
பயன்கள்: மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மருதாணி மலர்கள், வெண்மை, இள மஞ்சள், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும். மருதாணி இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகளை குணமாக்கும்.
பொருளாதார தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களது உடல் ஆரோக்கியத்துக்காக, ரெப்ளக்சாலஜி எனும் சிகிச்சையை மருத்துவமனைக்கு சென்று பெறுகின்றனர். இந்த சிகிச்சை, கால் நரம்புகளின் அழுத்தப் புள்ளியில் மசாஜ் செய்து, அதன் மூலம், உடலிலுள்ள ஒட்டுமொத்த பாகத்தையும் புத்துணர்வடைய வைப்பதாகும்.
மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக கருதப்படுகிறது. இதற்கு, மருதாணி இலையை அரைத்து, உள்ளங்காலில் வைக்க வேண்டும். அப்போது, கால் நரம்புகளில் மசாஜ் செய்தது போல், உடலின் அனைத்து பாகங்களும் புத்துணர்வடையும். மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.
மருதாணி இலைகளை அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதை வெயிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி எடுத்து, அந்த எண்ணெயை தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

