PUBLISHED ON : டிச 01, 2024

மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீர், அசுத்தமான தண்ணீர், உணவு, சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தால் பலவிதமான தொற்று நோய்கள் பரவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நம் ஊரில் மழை நீரில் கழிவுநீரும் கலந்தே வருகிறது. இதில் அபாயம் விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ் இருக்கலாம். இதனால், டைபாய்டு, மலேரியா, காலரா, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வரலாம். எனவே, வெளியில் நீரில் விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில், 'ஏடிஸ்' கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவர்.
எதிர்பாராத காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, தோலில் சிவப்பு திட்டுகள், மூட்டு வலி, உடலில் அரிப்பு ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகள். தீவிர நிலையில் ரத்தக் கசிவு, அதிர்ச்சி ஏற்படலாம். இந்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
கொசு உற்பத்தியை தடுக்க, வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, பாத்திரங்கள், டயர்கள், தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைப்பதை தவிர்ப்பது, கொசு வலைகள் பயன்படுத்துவது, ஜன்னல், கதவுகளில் கொசு வலை போடுவது, பகல் நேரங்களில் பூச்சியை விரட்டும் கிரீம்கள், தெளிப்பான்களை பயன்படுத்தலாம்.
உடல் முழுதும் மறைக்கும் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். இது விடியற்காலை, மாலை நேரங்களில் டெங்கு வைரஸை பரப்பும் கொசுக்களில் இருந்து பாதுகாக்கும். நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்த நீரை மட்டுமே குழந்தைகளுக்கு தர வேண்டும். டைபாய்டு, காலரா, அசுத்தமான நீர் வாயிலாகவே பரவுகின்றன.
நீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள கிருமிகள் அழிகின்றன. சாப்பிடுவதற்கு முன் சுத்தமான தண்ணீரால் கைகளை கழுவுகின்றனரா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். அப்போதைக்கு அப்போது சமைத்த சூடான உணவை மட்டுமே குழந்தைக்கு தர வேண்டும்.
டாக்டர் ஸ்பூர்த்தி அருண், உள் மருத்துவப் பிரிவு,
புரோமெட் மருத்துவமனை, சென்னை
94807 94807
contact@promedhospital.com