PUBLISHED ON : மே 24, 2021

பெங்களூரு மையத்தில் 15 ஆண்டுகள் பணி செய்த பின், இரண்டு மாதங்களுக்கு முன், பதவி உயர்வு பெற்று சென்னை மையத்திற்கு மாற்றலாகி வந்தேன். முதல் அலை வந்த போது, பெங்களூரில் இருந்தேன்.
வைரஸ் தொற்று நம் நாட்டில் பரவும் செய்திகள் வந்ததும், நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர், வீட்டை காலி செய்யச் சொன்னார். பாதித்தவர்களை பாதுகாக்கும் நமக்கு ஒரு அடைக்கலம் இல்லாமல் போகிறதே என்ற அதிர்ச்சி தான் முதலில் என்னைத் தாக்கியது.
தொற்று காலத்தில் எங்கு சென்று வீடு தேடுவது?
முதல் அலையில், வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தி, அந்தப் பிரிவுக்கு யார் செல்கிறீர்கள் என்று கேட்ட போது, யாரும் முன் வரவில்லை. ஒரு வருடம் முன் இந்த புதிய வைரஸ் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை. நான் போகிறேன் சொன்னபோது, நீ சிங்கிள் பேரன்ட்... ஏன் ரிஸ்க் எடுக்கிற? என்று கேட்டனர்.
யாராவது ஒருவர் செய்துதானே ஆக வேண்டும்?
அதிலும் என்னுடைய பணிக்கு நான் நியாயமாக நடக்க வேண்டும். என் தலைமையில் 520 நர்ஸ் இருக்கின்றனர். நான் ரோல் மாடல் ஆக இல்லாவிட்டால், மற்றவர்களை எப்படி சொல்ல முடியும்? சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் தான் இந்த தொழிலுக்கு வந்தேன்.
தொற்று பரவல் காலத்தில் சொந்த பொறுப்புகளை நினைத்து தயங்காமல், மற்றவர்களுக்கு சேவை செய்வது தான் மருத்துவ தர்மம். இதில் நான் இறந்தால் கூட பெருமைப்படுவேன். ராணுவ வீரர்கள் நாட்டைக் காக்கின்றனர். அந்தப் பொறுப்பு இப்போது செவிலியர்களுக்கு வந்துள்ளது.
வேறு உடல் பிரச்னையில் உள்ளவர்களை விட, இந்த தொற்று பார்த்தவர்களிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கிறது. கடினமான வார்த்தைகள், மரியாதை இல்லாமல் பேசுவது எல்லாம் கிடையாது. அதீத பயத்தில் இருக்கிறன்றனர். மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் ரொம்பவே பயந்து விடுகின்றனர்.
அவர்களின் பயம் நியாயமானது. நன்றாக இருப்பர்: எதிர்பாராமல் மூச்சு திணறல் வரும்; வென்டிலேட்டர் போட வேண்டும். சிலர், நடந்து வருவர். ஆக்சிஜன் அளவு சட்டென்று குறைந்து விடும். முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. முதல் அலையில் இந்த அளவு அவசர சிகிச்சை தேவைப்படவில்லை.
குழந்தைகளோடு நேரம் செலவு செய்ய முடியவில்லை. வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்றாலும், அவர்கள் இதை புரிந்து கொள்கின்றனர். அம்மா, நர்ஸ் என்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது என்று சொல்வார்.
சாந்தி ராணி
தலைமை செவிலியர்,
போர்டிஸ் மலர் மருத்துவமனை, அடையாறு, சென்னை
