PUBLISHED ON : பிப் 19, 2023

மருத்துவத் துறையில் பல்வேறு சிறப்பு டாக்டர்கள் இருக்கின்றனர். பொது மருத்துவர், பொதுவான உடல் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
உயர் ரத்த அழுத்தம், எல்லா விதமான சர்க்கரை கோளாறுகளுக்கும், சர்க்கரை கோளாறு சிறப்பு மருத்துவரை பார்க்க வேண்டியுள்ளது.
சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு இதயக் கோளாறு வரும் வாய்ப்புகள், மற்றவர்களை விடவும், 8 - 10 சதவீதம் அதிகம். இவர்கள், இதய நோய் சிறப்பு மருத்துவரை பார்க்கின்றனர்.
ஒரு நோயில் ஆரம்பிப்பது, பல்வேறு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படும் அளவிற்கு சென்று விடுகிறது.
ஒரு நோயாளிக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், 5 - 10 ஆண்டுகளில், இதய நோய் சிறப்பு மருத்துவர், சர்க்கரை நோய் மருத்துவர் என்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டிஉள்ளது.
ஒவ்வொரு சிறப்பு டாக்டரிடம் செல்லும் போதும், அந்த நோய்க்கு உரிய மருந்து, மாத்திரைகள், விட்டமின் மாத்திரைகள் என்று, ஒவ்வொரு சிறப்பு டாக்டரும், நான்கு வித மாத்திரைகள் எழுதும் போது, மொத்தத்தில், 20 மாத்திரைகள் சேர்ந்து விடுகின்றன.
ஒரு சில நோயாளிகள் மட்டுமே, எத்தனை சிறப்பு டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றாலும், ஒவ்வொரு டாக்டரிடமும், மற்ற டாக்டர்கள் எழுதித் தரும் மாத்திரைகளை காட்டி, சரியாக சாப்பிடுகின்றனர்; ஆனால், பலர் இதை பின்பற்றுவதில்லை.
சர்க்கரை நோயாளி ஒருவருக்கு எதிர்பாராமல் மார்பு வலி, மூச்சு வாங்குகிறது என்றால், உடனடியாக சர்க்கரை கோளாறு டாக்டரிடம் செல்கிறார்; கையில் முழு மருத்துவ ரிப்போர்ட்டையும் எடுத்துச் செல்வதில்லை.
அந்த டாக்டரும், அந்த நேரத்திற்கான பிரச்னைக்கு சிகிச்சை தருவாரே தவிர, ஆற, அமர, 10 ஆண்டு விபரங்களையும் கேட்க நேரம் இருப்பதில்லை. அவர் ஒரு மருந்து சீட்டு தருவார்.
இதற்கு முன் ஆலோசனை பெற்ற டாக்டரும், அதே மருந்து தந்திருப்பார்; இரண்டும், வேறு பெயர்களில், ஒரே கூட்டுப் பொருளில் தயாரான, வேறு மாத்திரையாக இருக்கும்.
இது தெரியாமல் இரண்டு, 'டோஸ்' சாப்பிடுவார். அதனால், வேறு பல பிரச்னைகள் வரும். இது வெகு சகஜமாக நடக்கும் விஷயமாகி விட்டது.
இதற்கு காரணம், நம்முடைய மருத்துவ அமைப்பில் ஒழுங்குமுறை இல்லை.
'மெடிக்கல் ரிக்கார்டு கீப்பிங்' என்பது ஐரோப்பா, அமெரிக்கா போல இங்கு இல்லை. அங்கு, ஒவ்வொரு நோயாளிக்கும், அவரின் உடல் குறித்த முழு விபரங்கள் இருக்கும்.
அவரின் அடையாள எண்ணை வைத்துப் பார்த்தால், அவர் என்ன நோயாளி, என்ன மருந்து சாப்பிடுகிறார், எது அவருக்கு, 'அலர்ஜி'யாக உள்ளது, அவசர நேரத்தில் என்ன மருந்து தர வேண்டும், 'நான் சர்க்கரை நோயாளி... மயக்கம் வந்தால், 'ஹைப்போ கிளைசீமியா' என்று புரிந்து, உடனே குளுக்கோஸ் கொடுங்கள்' என்பது உட்பட, எல்லா விபரங்களும் அவர் கையில் உள்ள அடையாள அட்டையில் இருக்கும்.
நாம் கையில் தங்கத்தில், 'பிரெஸ்லெட்' வளையல் போடுகிறோம்; அவர்கள், உயிர் காக்கும் விபரங்கள் அடங்கிய அடையாள, 'பேண்ட்' போடுகின்றனர்.
இது போன்ற, 'சிஸ்டம்' நம்மிடமும் இருந்தால், பெரும்பாலான அவசர நேர உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.
டாக்டர் தமிழ்செல்வன்,
எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை.
97894 81143
