PUBLISHED ON : ஜன 25, 2017

ரபீக், 30 வயது இளைஞர். திருமணமாகி ஓர் ஆண்டு கடந்து விட்டது. பள்ளி மாணவனாக இருக்கும் போதே, கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். அதனால் படிப்பையும் சேர்த்து, கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே வளர்ந்தான். கல்லுாரி சென்ற பின், படிப்பு இரண்டாம் பட்சமானது. கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே, கல்லுாரியில் தனிக்குழு அமைத்து, விளையாட ஆரம்பித்தான். தன் கனவே, நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே. கல்லுாரியில், கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தே, பல பெண்களுக்கு ரபீக் மேல் காதல். ரோகிணிக்கும் தான். எனவே, ரபீக்கிடம் தன் காதலை வெளிப்படுத்தினாள். ரபீக்குக்கும் ரோகிணி மேல் ஈர்ப்பு ஏற்படவே, கல்லுாரி காலம் வரை காதலித்துவிட்டு, வேலை கிடைத்த பின், திருமணம் செய்து கொண்டனர். காதலித்து கைபிடித்த கணவன், திருமணத்திற்கு பின், தன் மேல் பிரியமாய் இருப்பான் என்றும், தனக்கு தான் முன்னுரிமை கொடுப்பான் என்றும், நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்போதும், கிரிக்கெட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான்.
எனவே, ரோகிணிக்கு வெறுத்து தான் போய்விட்டது. இதனால், தினமும், வீட்டில் பிரச்னை வெடித்தது; நிவாரணம் தேடி என்னிடம் வந்தார் ரோகிணி. இனி, தன்னால் அவருடன் வாழ முடியாது என்றார். இருவரையும் அழைத்து பேசினேன். ஒரு மனித மனதின் உணர்வுகள் குறித்து விளக்கினேன். தன்னை நம்பி வந்த பெண்ணை புரிந்து கொள்ளாமல், இருக்கலாமா என்பது குறித்தும் வாழ்க்கையில், எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், கவுன்சிலிங் அளித்தேன். கவுன்சிலிங்குக்கு தொடர்ந்து வந்தனர். கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் தான், அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது என்ற, சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொண்டனர்.
கவுரி சங்கர்
மனநல ஆலோசகர், வடபழனி.
gowrishanker2012@gmail.com
