கண்களில் வறட்சியை உண்டு பண்ணும் ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ்!
கண்களில் வறட்சியை உண்டு பண்ணும் ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ்!
PUBLISHED ON : டிச 12, 2021

பர்கரை கண் முன் கொண்டு வந்தால், கண்ணீர் அடுக்கு இயல்பாகவே அமைந்துள்ள விதம் புரியும். கண்களின் மேலேயும் கீழேயும் உள்ள அடுக்குகளில், சற்றே பிசுபிசுப்பாக எண்ணெய் பசையுடன் திரவம் இருக்கும்.
மத்தியில் உள்ள அடுக்கில் மட்டும் நீர் இருக்கும். நீர் ஆவியாவதை தடுக்க இயல்பாகவே இப்படி அமைந்துள்ளது. இமைக்கும் போது, வெவ்வேறு இடங்களில் இருந்து சுரக்கும் இம்மூன்று அடுக்கு திரவமும், சீராக கண் முழுதும் பரவும்.
ரத்தத்தின் வழியாகவே உடல் முழுதும் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் சென்று, சக்தி கிடைக்கிறது. கருவிழியில் ரத்த குழாய் இல்லாததால், கண் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் வழியாக, கண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.
ஒவ்வொரு முறை கண்களை இமைக்கும் போதும், கண் சுரப்பிகள் சுரக்கும் நீர், கண்களின் மேல் பகுதியில் உள்ள கருவிழியில் அடுக்கு போல படரும். நிமிடத்திற்கு 15 முறை இமைக்கும் போது, நீரில் இருந்து ஆக்சிஜனை கருவிழி எடுத்துக் கொள்ளும். \
நீண்ட நேரம் கண்களை இமைக்காமல், லேப்டாப், மொபைல் போனை பார்த்தால், கருவிழிக்கு ஆக்சிஜன் கிடைக்காது. எரிச்சல் ஏற்பட்டு, கண்கள் வறட்சியாகி விடும். இதனால், கண்களில் உறுத்தல், நீர் வருவது, மணல் போட்டு அறுப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையை இமைக்காமல் பார்ப்பதால், நீர் ஆவியாகி வறட்சி ஏற்படும். நம் நோய் எதிர்ப்பு செல்கள், உடல் செல்களை அழிக்கும் ஆட்டோ இம்யூன் பிரச்னை, ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ், 40 வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள்...
இவற்றின் அறிகுறியாகவும் கண்களின் வறட்சி இருக்கலாம். இதனால் கண்களில் திரவம் சுரப்பதே குறைந்து விடும். கண்களில் வறட்சி இருந்தால், எந்த அடுக்கில் திரவ சுரப்பு போதுமான அளவில் இல்லை; என்ன விதமான வறட்சி என்று தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும். தொடர்ந்து 'ஸ்கிரீன்' பார்ப்பதை தவிர்த்து, 20/20 விதியை பின்பற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி துாரத்தில் உள்ள பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும். அப்போது கண்களில் உள்ள தசைகள் 'ரிலாக்ஸ்' ஆகும்.
- டாக்டர் என்.வெங்கடேஷ் பிரஜ்னா,
கண் சிறப்பு மருத்துவர்,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை.

