PUBLISHED ON : நவ 12, 2023

குளிர்காலம், மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷத்தால் மூக்கடைப் பால், காதில் வலி இருந்தால் அலட்சியம் செய்வது தவறு.
மூக்கின் பின்னால் உள்ள அடினாய்டு என்ற உறுப்பில் தொற்று ஏற்பட்டு வீங்கி, மூக்கடைப்பை ஏற்படுத்தலாம். மூக்கு அடைப்பதால் காதில் ஏற்படும் வலி, கேட்கும் திறன் குறைவதை குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது.
காதின் உள்ளே நீர் சேருவதால், ஒலிகளை கேட்க முடியாமல், எதிலும் கவனம் இல்லாமல் இருப்பர். சளியால் ஏற்பட்ட வலி, காதை அடைக்கிறது என்று தவறாக புரிந்து கொள்கிறோம்; மூக்கின் பின்னால் இருக்கும் காதுக்கு செல்லும் குழாய் அடைத்து, காது சவ்வின் பின்புறம் நீர் கோர்த்து இருக்கும். சைனஸ், டான்சிலிடிஸ் போன்ற கோளாறுகள் இருந்தாலும், சளி தொந்தரவுகள் ஏற்பட்டு, சீழ் பிடிக்கலாம். இதில் துர்நாற்றம் வீசினால் எலும்புகள் பாதித்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
சளியை வெளியில் எடுப்பதற்கு அதிக அழுத்தம் கொடுத்து மூக்கு சிந்தவே கூடாது. இதுவும் காதுகளில் உள் நரம்புகளை பாதிக்கும். மூக்கடைப்பிற்கு அடிக்கடி சொட்டு மருந்து போடுவது தவறு. சொட்டு மருந்திற்கு பழகி விட்டால், அதன்பின் சொட்டு மருந்து போட்டால் தான் துாக்கம் வரும் என்ற நிலை வந்து விடும்.
டாக்டர் சுந்தர் கிருஷ்ணன்,
காது, மூக்கு, தொண்டை மருத்துவ ஆலோசகர்,
சென்னை95001 96702