PUBLISHED ON : ஜூன் 12, 2022

அதிக உடல் எடை, உடல் பருமன் இருந்தால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை உட்பட பல உடல் பிரச்னைகள் வரும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், உடல் எடை அதிகம் உள்ள ஒரே காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும், 22 ஆயிரம் பேர், பல விதமான கேன்சரால் பாதிக்கப்படுவதாக, லண்டனில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்கது, பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் கேன்சர், மார்பகக் கேன்சர். இது தவிர, செரிமான மண்டலம் தொடர்பான உணவுக் குழாய், பெருங்குடல், இரைப்பை, கணையம், கல்லீரல் கேன்சர் என்று, 13 வகை கேன்சர் உடல் பருமன் இருந்தால் வருகிறது.
'அதிகப்படியான கொழுப்பு உடலில் சேரும் போது, அது, 'ஈஸ்ட்ரோஜென், இன்சுலின்' போன்ற ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கத் துாண்டுவதால் கேன்சர் வருகிறது' என்ற கருத்து இருந்தாலும், உறுதியான முடிவுகள் இல்லை.
துரித உணவுகளும், பதப்படுத்திய உணவுகளும் குறைந்த விலையில், அதிக அளவில் கிடைத்த பின் தான், பல உடல் பிரச்னைகள் வந்தன என்பது மட்டும், எல்லா ஆராய்ச்சிகளிலும் உறுதியான முடிவாக உள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் நியூஸ்,
லண்டன், ஐரோப்பிய யூனியன்
