PUBLISHED ON : பிப் 02, 2025

மாரடைப்பின் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். முன்கூட்டியே அறிந்து சிகிச்சைகளை எடுக்கும் போது உயிரிழப்பை தவிர்க்க முடியும்.
மார்பு பகுதியில் வலி, அசவுகரியம், அழுத்தம், மிகப் பெரிய பாரத்தை எடுத்து மார்பு பகுதியில் வைப்பதை போன்ற அழுத்தம், பிசையும் உணர்வு. மார்பு பகுதியில் ஏற்படும் வலி அப்படியே தோள்களுக்கு பரவும்; அதன்பின் கைகளுக்கு பரவும். குறிப்பாக இடது பக்க தோள், கை, கழுத்து, தாடைப் பகுதி, பின்பக்க அல்லது மேல் பக்க வயிற்றில் பரவும்.
• ஓய்வாக இருக்கும் நேரங்களில் கூட சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். சிலருக்கு மிதமான வேலை செய்தாலும் சுவாசிப்பதில் சங்கடம் ஏற்படலாம்.
• வழக்கத்திற்கு மாறாக அதீதமாக வியர்க்கும்.
சில நேரங்களில் வயிற்றில் அமில சுரப்பு இருப்பதை போன்ற அறிகுறிகள் தெரியும். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள், சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு, வழக்கத்திற்கு மாறாக, உடல் பகுதிகளில் வலி, வயிறு மேல்பகுதியில் அசவுகரியம், தாடை, தொண்டையிலும் இதே உணர்வு இருக்கும்.
செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
பல நேரங்களில் செரிமான கோளாறுகளையும், மாரடைப்பு அறிகுறிகளையும் சேர்த்து குழப்பிக் கொள்வதும் உண்டு.
சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படலாம். இதை, 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்போம்.
இதில் குறிப்பிட்டு உணரும் படியான மார்பு வலி எதுவும் இருக்காது.
மாரடைப்பிற்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். ஹார்ட் அட்டாக் என்றாலே மார்பு பகுதியில் அனைவருக்கும் வலி இருக்கும் என்று சொல்ல முடியாது. அறிகுறிகள் இருந்தாலே, தாமதப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம்.
ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'டைம் இஸ் மஸ்சில்'- Time is Muscle என்று சொல்லுவோம். அதாவது, தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் இதய தசைகளில் ஏற்படும் சிதைவு அதிகமாகும். செயலிழந்த இதய தசைகளை பழைய நிலைக்கு கொண்டு வருவது முடியாது. அதனால், எவ்வளவு விரைவாக மருத்துவ உதவி பெறுகிறோமோ அந்த அளவு இதய தசைகளை பாதுகாக்க முடியும்.
டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு,
இதய கோளாறுகள் சிறப்பு மருத்துவ ஆலோசகர், சென்னை
044 - 2834 6666, 94457 76666
healthyheartchennai@gmail.com