PUBLISHED ON : அக் 25, 2019

எல்லா பருவத்திலும் வரும் தோல் பிரச்னைகள் எவை?
தலை முதல் கால் வரை, எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்னை, பூஞ்சைத் தொற்று.
சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், மாதக்கணக்கில் பிரச்னையோடு வருபவர்கள் அதிகம். தலையில் ஏற்படும் பொடுகை, தோல் வறட்சியால் வருவது என்று தவறாக நினைக்கிறோம். இதுவும், பூஞ்சைத் தொற்றுதான்.
பூஞ்சைத் தொற்று எதனால் ஏற்படுகிறது?
அதிகமாக வியர்ப்பது, வியர்வையை துடைக்காமல், அதிக நேரம் ஜீன்ஸ் அணிந்திருப்பது, குளித்த பின், ஈரத்தை முழுமையாக துடைக்காமல் விடுவது, தோலில் இருக்கும் ஈரத்தில், பூஞ்சை வசதியாக வளரும்.
தொற்று ஏற்பட்டால், அரிப்பு இருக்கும்; மருந்தகங்களில், சுயமாக மருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர். வேறுபாடு இல்லாமல், ஸ்டீராய்டு கிரீமை அவர்கள் தருகின்றனர்.
இந்த கிரீம், பயன்படுத்தும் போது, நல்ல பலன் கிடைக்கும். கிரீம் பயன்படுத்துவதை நிறுத்தியதும், மேலும் வலிமையுடன் தொற்று பாதிக்கும். காரணம் கிரிமினால், பூஞ்சை அழியாதுன; தொற்று தராமல் அப்படியே தங்கி விடும்.
அதன்பின், தோல் டாக்டர், வீரியம் மிக்க கிரீம், மருந்துகளை தர வேண்டியிருப்பதோடு, அதிக நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியமும், ஏற்படும். சுய மருத்துவம் செய்யாமல், முதலிலேயே, டாக்டரிடம் ஆலோசனை பெற்றால், இதை தவிர்க்கலாம்.
பூஞ்சைத் தொற்று எப்படி பரவுகிறது?
சுய மருத்துவம் செய்து, நோய் தீவிரமடைந்தால், மற்றவர்களுக்கும் வேகமாக பரவலாம். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துண்டு, பொது கழிப்பறையை பயன்படுத்துவது, மற்றவர்களின் ஆடைகளை அணிவது, தொற்று பாதித்தவர் பயன்படுத்திய ஆடைகளை, மற்ற துணிகளுடன் சேர்த்து துவைத்து பயன்படுத்துவது, வெயில் படாத இடங்களில் காய வைக்கும் ஆடைகளில், பூஞ்சை வளரும்.
பிறந்த குழந்தையில் இருந்து, வயதானவர்கள் வரை, அனைவரையும் பூஞ்சை தொற்று தாக்கும். நடுத்தர வயதினர், இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தொற்று ஏற்பட்டதும் என்ன செய்ய வேண்டும்?
தோல் பிரச்னை இருந்தால், தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது.
பொது மருத்துவர்கள் பலர், இரண்டு மாதங்கள் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, விரைவில் குணப்படுத்த வேண்டி, ஸ்டீராய்டு மருந்துகளை தருகின்றனர். சிகிச்சையும் முழுமையாக இல்லாமல், ஸ்டிராய்டு மருந்துகளின் பாதிப்பும் சேர்ந்து பூஞ்சை வீரியமாகத் தாக்குகிறது.
சிகிச்சை எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றால், டாக்டர் சொல்லும் ஆலோசனைகளை, நோயாளி பின்பற்றுகிறாரா என, பார்க்க வேண்டும்.
குளித்து முடித்தவுடன், தோலை ஈரமில்லாமல் வைத்திருப்பது, சர்க்கரை கோளாறு இருக்கிறதா, கேன்சர் நோயாளியா என்பதை எல்லாம் கவனிக்க வேண்டியது முக்கியம்.
தலையில் பொடுகு ஏன் ஏற்படுகிறது?
பத்தில் எட்டு பெண்களுக்கு, இந்த பிரச்னை இருக்கிறது.
சீயக்காய், பாசிப்பருப்பு போன்றவற்றை தலையில் தேய்க்கும் போது, இயற்கையான பொருட்கள் என்றாலும், தோலில் மேல் பரப்பில் இருக்கும் துவாரங்களை அடைத்து விடுகிறது.
இதனால், ஈரம் அப்படியே தங்கி, பூஞ்சைத் தொற்று வரலாம். தேங்காய் எண்ணெய் தேய்த்த, பல மணி நேரம் வைத்திருந்தாலும், பூஞ்சை வளர்வதற்கான வாய்ப்பு அதிகம்.
ஷாம்புகளை பயன்படுத்தினால், சல்பேட் இல்லாத ஷாம்புகளை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய சூழலில், பொடுகே வரக்கூடாது என்று தவிர்க்க முடியாது.
மாசு, தூசு படாமல், தலைமுடியை துணியால் மூடுவது போன்ற சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், பாதிப்பு குறையும்.
டாக்டர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி
தோல் மருத்துவர்,
சென்னை
99419 39309, 99419 95547

