PUBLISHED ON : அக் 24, 2019

காற்று மாசால், ஆரோக்கியம் பாதிக்குமா?
மனிதர்களை அச்சுறுத்தும், 10 ஆரோக்கிய பிரச்னைகளை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில், காற்று மாசு, முக்கிய இடத்தில் உள்ளது. சென்னை, டில்லி உட்பட, இந்திய நகரங்களில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், காற்று மாசு பெரிய பிரச்னையாகி விட்டது.நாம் பின்பற்றுகிறோமோ, இல்லையோ, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி பற்றி, குறைந்த பட்சம் பேசுகிறோம், படிக்கிறோம், சொல்கிறோம்.ஆனால், நம் உடலில், நாம் அக்கறையே செலுத்தாமல் இருக்கும் ஒரு உறுப்பு என்றால், அது நுரையீரல் மட்டும் தான்.
காற்று மாசு, நுரையீரலை எந்தளவு பாதிக்கும்?
நுரையீரல், சுவாசப் பைகள் மாசடையும். பிராங்கைடிஸ், ஆஸ்துமா, அலர்ஜி, கேன்சர் என, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் வரும். காற்றில் உள்ள மாசால், சர்க்கரை நோய் வரும் எனச் சொன்னால் நம்புவீர்களா... ஆனால், அது உண்மை தான்.காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், சுவாசத்தின் வழியே உள்ளே சென்று, ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்கு சென்று, பக்கவாதத்தை ஏற்படுத்தும். இதயத்திற்கு செல்வதால், மாரடைப்பு வரும். கணையத்தின் உள்ளே சென்று, இன்சுலின் சுரப்பை பாதித்து, சர்க்கரை கோளாறை உண்டு பண்ணும்.
காற்றை தேர்வு செய்வது நம் கையில் இல்லையே?
நிறைய மரம், செடி, கொடிகளை வளர்த்து, சுற்றுச்சூழலை பசுமையாக வைத்திருப்பது, காற்று மாசை தடுக்கும். இது, நம்மால் முடிந்த விஷயம். சமையல் அறையில் இருந்து வரும் மாசால், பெண்கள் அதிகளவு, நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். 'அக்னி மூலை, ஈசான மூலையில், சமையல் அறை இருக்க வேண்டும்' என, நம் முன்னோர் சொன்னது, காற்றோட்டத்திற்கு வசதியாக இருக்கும் என்பதால் தான். காற்றோட்ட வசதியுள்ள, வெளிச்சம் வரக்கூடிய இடமாக, சமையல் அறை இருக்க வேண்டும்.
வாகன மாசை கட்டுப்படுத்த என்ன வழி?
முடிந்தளவு, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். ஒரே இடத்திற்கு செல்லும் போது, ஆளுக்கு ஒரு வாகனத்தில் செல்வதை விடவும், நான்கைந்து பேர் சேர்ந்து, ஒரு வாகனத்தில் செல்லலாம். தேவையில்லாமல் வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நுரையீரலை பாதுகாப்பது எப்படி?
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மூலிகை, துாதுவளை. இன்று, இதன் தேவையை அதிகம் உணர்கிறோம். நம் முன்னோர், இந்த மூலிகையை அதிகம் பயன்படுத்தி, ஆரோக்கியமான நுரையீரலுடன் வாழ்ந்து இருக்கின்றனர்.'மாதுளை வளர்த்த வீட்டில், வயிற்றில் கலங்கமில்லை... துாதுவளை வளர்த்த வீட்டில், நெஞ்சில் கலங்கமில்லை' என்ற, ஒரு பழமொழி உண்டு. துாதுவளையை வளர்க்க முடியாவிட்டாலும், கடைகளில் கிடைக்கிறது.வாரத்திற்கு இருமுறை, சட்னி, துவையல் என, பிடித்த மாதிரி சமைத்து சாப்பிடலாம். நுரையீரலை சுத்தம செய்யும் திறன், இதற்கு அதிகம்.

