PUBLISHED ON : ஜூலை 29, 2015
* ப்ரியா, கொளத்தூர்: என் குழந்தைக்கு வயது மூன்றாகிறது. மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது அடிக்கடி கோபப்படுகிறான்; அவர்களை அடித்து விடுகிறான். அவனை எப்படி திருத்துவது?
குழந்தைகளைப் பொறுத்தவரை, கோபம் உள்ளிட்ட உணர்வுகளை, சரியாக கையாள வேண்டும் என்பதை, சரியாகக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகள் சண்டையிட்டுக் கொள்வது இயல்பென்றாலும், கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தையும் சரியாக அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். இல்லையென்றால், அவர்கள் வளர்ந்தபிறகும், அதே நிலை நீடிக்கும்.
எனவே, குழந்தைகளை எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும், வன்முறையை, மற்ற குழந்தைகளிடம் கையாளும்போது, அங்கேயே திருத்துவது, குழந்தையின் எதிர்காலத்திற்கு, நாம் செய்யும் நன்மைகளில் ஒன்று. எனவே, குழந்தை மற்றவர்களிடம் கோபமாக நடந்து கொள்ளும் போது, தவறு என்று திருத்துங்கள். ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்று பழமொழியே உண்டு.
மீனாட்சி, மனநல மருத்துவர், திருச்சி.
* திவ்யா, வில்லிவாக்கம், சென்னை: நான் விளம்பர பிரிவில் வேலை செய்யும் பெண். வயது 23. வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்படுகிறது. அதற்கு காரணம் என்ன?
மாதவிலக்கின் போது, கருப்பைப் படலத்தை வெளியேற்ற, கருப்பை சுருங்கி விரிந்து தள்ளுகிறது. இந்தச் சுருங்கி விரிதல் காரணமாக அடிவயிறு, அடிமுதுகு போன்ற இடங்களில் வலியும், சில நேரங்களில் தசைப்பிடிப்பும் தோன்றலாம். ரத்தப்போக்கு துவங்குவதற்கு சற்று முன்பாக அல்லது துவங்கிய உடனே, இந்த வலி ஏற்படலாம். வலி ஏற்படும் போது லேசாக தேய்த்து விடலாம். சுடுதண்ணீர் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். அதற்கு பிறகும் தாங்க முடியவில்லை எனில், மருத்துவரை அணுகலாம்.
சாந்தி, மகளிர் நல மருத்துவர். சென்னை.
* நடேசன், கேளம்பாக்கம், சென்னை: எனது, 24 வயது நண்பன், ஒரு விபத்தில், 'எக்ஸ்ட்ராடியூரஸ் ஹெமடோமா' என்ற நோயால் இறந்து விட்டான். அந்த நோய் பற்றிய விளக்கத்தை தர முடியுமா?
மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையில் இருப்பது மூளை உறை. விபத்தில் அடிபடும்போது, மண்டை ஓடு உடைந்தால், மூளை உறையில் இருக்கும் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, ரத்தம் கசியும். அளவுக்கு அதிகமாக, ரத்தம் கசியும்போது, மூளையின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். இதனால், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் துண்டிக்கப்பட்டு, மூளை செயலிழந்துவிடும். இதைத்தான், மூளைச்சாவு என்கிறோம்.
பாதிப்பு ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்து, மூளைக்குச் செல்லும் அழுத்தத்தைக் குறைக்காவிட்டால், உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதையே, மருத்துவ மொழியில், 'எக்ஸ்ட்ராடியூரஸ் ஹெமடோமா' என்கின்றனர்.
அமலநாதன், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், பாண்டிச்சேரி.
