PUBLISHED ON : மார் 22, 2015

'பசி எடுப்பதில்லை. படுத்தால் தூக்கம் வருவதில்லை. மூட்டு வலி உயிர் போகிறது. காதும் சரியாக கேட்பதில்லை. டாய்லெட் போனால் எவ்வளவு முக்கினாலும் பயனில்லை...' வயோதிகர்கள் பலர் அனுபவிக்கும்
பிரச்னைகள் இவை. நேரா நேரத்துக்கு முறையான உணவு முறை, உடற்பயிற்சி இருந்தால் பிரச்னையே இல்லை என்கின்றனர் டாக்டர்கள். அளவாக, அவசியமானதை மட்டும் சாப்பிட வேண்டிய காலம், முதுமைக் காலம். இந்த பருவத்தில் பல பிரச்னைகள் தண்ணீர் சாப்பிட மறுப்பதிலும், மறப்பதிலும்தான் துவங்குகிறது. பெரும்பாலான பெரியவர்கள் ரத்தக் கொதிப்புக்கு, சர்க்கரைக்கு, இதய நோய்க்கு, மலச்சிக்கலுக்கு மருந்து சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.
இந்த மருந்துகளால் பல நேரம் நீரிழப்புக்கும், தேவையான உப்பு விகிதம் ரத்தத்தில் குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. இத்தனை பிரச்னைகளையும் சரியான அளவில் சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவதன் மூலமே தவிர்க்க முடியும். வயதாகும்போது, உடலின் நீரிழப்பை அறிவுறுத்தும் தாக உணர்வு, இளம் வயதைக் காட்டிலும் கொஞ்சம் குறைவு. அதை புரிந்து, வீட்டார்தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியதை நினைவுபடுத்த வேண்டும். கிரீன் டீ, பப்பாளி, மாதுளை ஆகியவற்றை சாப்பிடுவதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். வயோதிகத்தில் பழங்கள் மிகவும் அத்தியாவசியமானவை.
மலச்சிக்கல் போக்க, இதய நாடிகளின் கொழுப்பை அகற்ற, கரையும் நார்களையும், செல் அழிவைப் போக்க பாலிபீனால்களையும், ஆற்றலை நீடித்துத்தர, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டையும் தரும் பழங்கள், தினசரி உணவில் ஒரு பகுதியாக இருப்பது மிக முக்கியம். மாம்பழம், சப்போட்டா பழங்கள் சாப்பிடக்கூடாது.
பழங்களைத் தாண்டி, இன்னும் அதிக வைட்டமின் சத்துக்கு, வைட்டமின் பி6-ம், புரதச் செறிவு அதிகம் உள்ள பாசிப்பயறு போட்டுச் செய்த கீரைக் கூட்டு, பீன்ஸ் பொரியல் மற்றும் வைட்டமின் பி12 அதிகம் உள்ள கோழி ஈரல் கறி அவ்வப்போது சாப்பிட்டால் போதுமானது. வயோதிகத்தில் கொழுப்பு உணவைக் குறைக்க வேண்டும். முதுமையில் எலும்புத் தசைகளின் குறைவால், புரத சேமிப்பு குறைந்து போவதால் தேகம் மெலிந்து போகும்.
ஈடுகட்ட முளை கட்டிய பாசிப்பயறு, முட்டை வெண்கரு, சத்து மாவு அடிக்கடி எடுப்பது முக்கியம். முழங்கால் மூட்டுவலியும், தசைவலிகளும் வராமல் இருக்க, வற்றல் குழம்பு, புளியோதரை போன்ற அமில உணவுகளுக்கு ஆசைப்படவே கூடாது. பசியில் தவிக்கும்
முதியோரின் நிலைமைதான் கொடுமை.
கடுக்காய், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணிக் கீரை போன்ற எளிய காயகற்ப மூலிகைகள், வயோதிகத்தின் வரப்பிரசாதம். காலையில் இஞ்சி, கடும் பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடுவது, வயோதிகத்தில் நோய் வராது காக்கும் மந்திரம் என்கிறது சித்த மருத்துவம். முறையான உணவு, சரியான நேரத்தில் அளவான உணவு, தண்ணீர், உடற்பயிற்சி, தியானம், வீட்டாரின் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது ஆகியவற்றை பின்பற்றினால், ஆரோக்கிய வாழ்வு உத்தரவாதம்.

