PUBLISHED ON : மார் 22, 2015

சித்த மருத்துவத்தில் கூறப்படும் பெரும்பாலான பொருட்கள், அரிதாக கிடைக்கக்கூடியதாக இருக்கும். இதனாலேயே எளிய மருத்துவங்கள் பலவும் அனைத்து மக்களாலும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்நிலையில், எளிதாக கிடைக்கக் கூடிய, பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஜாதிக்காயால் பல நோய்களுக்கு தீர்வு காண முடிகிறது.
அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு உள்ளிட்டவைகளை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது உட்கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும். ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் நோய்களை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது.
தசைப்பிடிப்பை நீக்கும்: ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. காலரா நோயினால் ஏற்படும் தசைப்பிடிப்பு வலியை போக்க உதவுகிறது. இதன் வடிநீர், காலரா நோயாளிகளுக்கு ஏற்படும் தாகத்தை கட்டுப்படுத்துகிறது. ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நாவில் உண்டாகும் வறட்சி குறையும். ஜாதிக்காய் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு 'ஜாதிபத்ரி' எனப்படும். ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, உள்ளிட்ட நோய்களை நீக்குகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க வேண்டும். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.
ஜாதிக்காய், சித்திர மூலவேர், லவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளை தூள் செய்து, தினசரி காலை மாலை, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் சிறிதளவு கலக்கிக் குடித்துவிட வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். சுவாசகாசம், பெரும்பாடு, பக்கவாதம், தலைவலி, வயிற்றுவலி இவைகளைக் குணப்படுத்துவதற்கும் இம்மருந்து பயன்படுகிறது.

