தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்தே, பிறருக்கு பரவுகிறது.

பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்தே, பிறருக்கு பரவுகிறது.

பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்தே, பிறருக்கு பரவுகிறது.


PUBLISHED ON : மே 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீதி அடைய வேண்டாம், பன்றிக் காய்ச்சலைக் கண்டு!

பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் வைரசுக்கு, 'ஏ எச்1 என்1' என்று பெயர். மூன்று வகையான இன்புளூயன்ஸா கிருமிகள் உள்ளன. இவற்றின் கலவையே, 'ஏ எச்1 என்1' பன்றிக் காய்ச்சலாக உருவாகிறது. இதில், பன்றிக் காய்ச்சல்

குளிர் மற்றும் மழைக் காலத்தில் மட்டுமே, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில், தற்போது வெயில் காலத்திலும் இந்நோய் பரவியுள்ளதற்கு முக்கிய காரணம், உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. 2009ல், வெளிநாட்டில் இருந்து, இந்நோய் இந்தியாவுக்கு பரவியது. தற்போது பரவி வரும், 'ஏ எச்1 என்1' ப்ளூ, எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை மட்டுமே தாக்குகிறது. கோவை மாவட்டத்தில், இந்தாண்டில், 20 பேருக்கு இந்நோய் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சையில் குணப்படுத்தப்பட்டனர்.

நோய்க்கான அறிகுறிகள்:

மூன்று நாட்களுக்கு மேலாக, காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், வயிற்றுப் போக்கு ஆகியவை இருப்பது, பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறி.

மூன்று வகை பன்றிக்காய்ச்சல்:

இந்நோய் பாதிக்கப்பட்டவர்களை ஏ, பி, சி என மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சளி, காய்ச்சல், இருமல், தொண்டை எரிச்சல், உடம்பு வலி, தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள், 'ஏ' பிரிவாகவும், இந்த பாதிப்புகளுடன் உள்ள, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நுரையீரல், இதயம், கல்லீரல், ஆஸ்துமா, எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள், 'பி' பிரிவாகவும், இந்த இரண்டுடன், மூச்சுத் திணறல், சளியில் ரத்தம், ரத்த அழுத்தம் குறைதல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்கள், 'சி' பிரிவாகவும் வகைப்படுத்தப் படுகின்றனர்.

இதில், 'ஏ' பிரிவினருக்கு, பன்றிக் காய்ச்சல் பரிசோதனை அவசியம் இல்லை. என்ன பாதிப்போ அதற்கான சிகிச்சை மட்டும் எடுத்து, வீட்டில் ஓய்வில் இருந்தபடி, டேமிபுளூ மாத்திரையை ஐந்து நாட்கள் உட்கொண்டாலே போதும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதித்து, உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

'பி' பிரிவினருக்கு, பரிசோதனையுடன், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.

'சி' பிரிவினருக்கு, மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

சிகிச்சையின் போது...

'ஏ எச்1 என் 1' சுவாசம் மூலம் பரவும் தன்மையுடையதால், 'ஏ' மற்றும், 'பி' பிரிவு பாதிப்புள்ளோர், ஐந்து நாட்களுக்கு வெளியே செல்லக் கூடாது. வீட்டில் தனி அறையில் இருந்து, டேமிபுளூ மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும். நோய் தாக்கப்பட்டவர்களிடம் குழந்தைகள், வயதானவர்களை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு செய்யும்போது, நோயாளிகளால் பிறருக்கு நோய் பரவுவது தடுக்கப்படுவதுடன், முழு ஓய்வில் இருப்பதால், நோயும் விரைவில் குணமடையும்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும், 'சி' பிரிவினருக்கு, மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இவர்களுக்கென தனி வார்டு ஏற்படுத்தி, அதில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர் முதல், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் வரை, அனைவரும், பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த அறைக்குள் நோயாளியின் உறவினர்கள், பார்வையாளர்கள் என, யாரையும் அனுமதிக்கக் கூடாது.

இந்த அறையை தினமும் டெட்டால், லைசால் போன்ற கிருமி நாசினியை பயன்படுத்தி, சுத்தப்படுத்த வேண்டும். நோயாளி பயன்படுத்தும் போர்வை, படுக்கை உள்ளிட்ட பொருட்களையும், மருத்துவ முறைப்படி, தூய்மைப்படுத்த வேண்டும். பணியில் இருக்கும் டாக்டர், செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் பணி முடிந்து, அறையை விட்டு வெளியேறும் போது, தங்கள் கைகளை மருத்துவ முறைப்படி, சுத்தம் செய்ய வேண்டும்.

நோய் தாக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு, பன்றிக் காய்ச்சலுக்கான தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறி தெரிந்தால், உடனடியாக டாக்டரை அணுகி, அவரின் பரிந்துரைப்படி, சிகிச்சை பெறுவது அவசியம்.

அவரது ஆலோசனையின் பேரில், 5 முதல் 7 நாட்களுக்கு, முழு ஓய்வில் இருக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கண்டிப்பாக கவனத்துடன், இதற்கான சிகிச்சை பெறுவது அவசியம்.

டாக்டர் பரிந்துரையின் பேரிலோ அல்லது பரிந்துரை இல்லாமலோ, எந்த ஒரு தனியார் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்தாலும், அவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும், சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பரிசோதனை செய்ய வருபவருக்கு, பரிசோதனை அறிக்கையை கொடுக்கும் முன்பே, சுகாதாரத் துறைக்கு, அந்த அறிக்கை அனுப்பப்பட்டு விடும். இதனால், நோய் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள், உடனுக்குடன், சுகாதாரத் துறைக்கு கிடைப்பதால், உடனடியாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது.

மேலும், பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களை, உடனடியாக, அவர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என ஆராய்ந்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க முடிகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறை

இதற்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தியும், பன்றிக் காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே, சாதாரண காய்ச்சலுக்கு கூட, பலர் இம்மையங்களில் ரத்தம், மூக்கு சளி, கவத்தின் மாதிரிகளை, 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, பரிசோதிக்கின்றனர்; இது தேவையற்றது.

தொடர் சிகிச்சை முறை

நகர் மற்றும் புறநகரில் உள்ள நகர் நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேவையான அளவு, டேமிப்ளூ மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் வீடுகளுக்கு, மருத்துவ பணியாளர்கள் சென்று, தொடர் சிகிச்சை அளிக்கின்றனர்.

நோய் பாதித்தோரின் குடும்பத்தினருக்கும், இந்நோய் குறித்து விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இதனால், ஒருவரை தாக்கிய இந்நோய் மேலும், பரவாமல் தடுக்கப்படுகிறது. நோயாளியும் விரைவில் குணமடைகிறார்.

எனவே, இந்நோய், குணப்படுத்தக் கூடியது தான். பெரியவர்களுக்கு மாத்திரையும், குழந்தைகளுக்கு, திரவ மருந்தும் வழங்கப்படுகிறது. இவற்றை மட்டும் எடுத்துக் கொண்டாலே போதும். இந்நோய் குறித்த பயம் இன்றி இருக்கலாம்.

டாக்டர் செந்தில்குமார்,
துணை இயக்குனர், மாவட்ட சுகாதார நலப் பணிகள் துறை, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us