கனவு தவிர்... நிஜமாய் நில்! - பற்களையும் பார்க்க வேண்டும்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - பற்களையும் பார்க்க வேண்டும்!
PUBLISHED ON : மே 05, 2019

கர்ப்ப காலத்தில், ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், ஈறுகள், எலும்புகளில் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
ஹார்மோன்களின் செயல்பாடுகளில், சமச்சீரற்ற தன்மை, இரு பாலருக்கும் பொதுவானது என்றாலும், பெண்களையே அதிகம் பாதிக்கிறது.
குழந்தைப் பருவம், வயதுக்கு வந்த பின், கர்ப்ப காலம், மாதவிடாய்க்கு முன், பின் என, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், பெண்களின் ஈறுகளை, அதன் அடியில் பற்களுக்கு ஆதாரமாக இருக்கும் எலும்புகளை பாதிக்கிறது.
முறையான மருத்துவ சிகிச்சை இல்லாமல், இரண்டாம் நிலை தொற்று ஏற்பட்டால், பற்களை நேரடியாக பாதிக்கும்.
ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால் வரும் பல்வேறு பாதிப்புகள் குறித்து தெரிந்திருப்பதைப் போன்று, ஈறுகள், எலும்புகள், பற்களில் ஏற்படும் பாதிப்பைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
மற்ற பாதிப்புகளைக் காட்டிலும், கர்ப்ப காலத்தில், மாதவிடாய் நிற்பதற்கு முன் அல்லது நின்ற பின் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். குறிப்பாக, கர்ப்ப காலத்தில், ஹார்மோன்களின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும்.
செரிமான மண்டலத்தில் இருப்பதைப் போலவே, வாயிலும் நல்ல பாக்டீரியாக்களும், கெட்ட பாக்டீரியாக்களும் உள்ளன. இந்த மாற்றங்களால், நல்ல பாக்டீரியாக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்; வாய் பகுதியில், ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்.
இதனால், ஈறுகளில் லேசாக கட்டிகள் போன்று வீக்கம் வரும். இது, ஈறுகளில் சிறு சிறு கட்டிகளாக இருக்கலாம்; ஒரே இடத்திலும், பெரியதாக வீங்கலாம்.
கர்ப்பத்தின் இரண்டாவது மாதத்தில் இருந்து எட்டாவது மாதத்திற்குள், இது போன்ற பிரச்னைகள் வரும்.
கர்ப்பம் உறுதியான இரண்டாவது மாதத்தில், பல் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பத்தின் துவக்கத்தில், வாந்தி அதிகம் இருப்பதால், எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும், உணவு துகள்கள், பல் இடுக்குகளில் தங்கி விடுவதைத் தவிர்க்க இயலாது.
குறிப்பிட்ட இடைவெளியில், டாக்டரின் ஆலோசனைபடி சுத்தம் செய்து கொண்டால், குழந்தை பிறந்த உடன், பெரும்பாலான பிரச்னைகள் தானாகவே சரியாகி விடும்.
மெனோபாஸ் எனப்படும், மாதவிடாய் நின்ற பின், ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறையும்; கால்சியம் குறைபாடு ஏற்படும்.
இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் இருக்கும் மென்மையான எலும்புகள், கால்சியம் குறைபாட்டால் பலவீனமாகி விடும்.
இந்த குறைபாட்டால், பொதுவாகவே உடலில் ஒரு வறட்சித் தன்மை வரும். வாயில் இதுபோல ஏற்பட்டால், எச்சில் போதுமான அளவு சுரக்காமல், பற்களில் சொத்தை விழுவது உட்பட, பல பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, டாக்டரின் ஆலோசனை பெற்று, சுகாதாரமான முறையில் பற்களைப் பராமரிப்பது ஒன்று தான் நிரந்தரத் தீர்வு.
டாக்டர் வி.சுரேஷ், பல் சிறப்பு மருத்துவர்,
சிம்ஸ், சென்னை. மொபைல்: 98944 53115
