PUBLISHED ON : ஏப் 07, 2019

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், அதிக அளவில் பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் ஒன்று. இதற்கு, தடுப்பு மருந்துகள் பல ஆண்டுகளாகவே இருக்கின்றன. ஆனால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் முதல், 45 வயது வரை உள்ள பெண்கள், இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
தொடர்ந்து இரண்டு மாதங்கள், மாதத்திற்கு ஒன்று, அதன்பின், நான்காவது மாதத்தில், ஒரு, 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டும்.
குறிப்பிட்ட இந்த கேன்சரை உண்டாக்கும் மரபணு உள்ளவர்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு தரும் என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. பதினைந்து வயதிற்குள், இரண்டு ஊசி போதுமானது.
இது தவிர, ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, 'பேப் - ஸ்மியர்' பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனை செய்தால், கர்ப்பப்பை வாயில், கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை, 15 ஆண்டுகளுக்கு முன்பே கூட கண்டறிய முடியும்.
மிக எளிமையான பரிசோதனை இது. வலியோ, மயக்க மருந்து தர வேண்டியதோ இல்லை. பாதுகாப்பற்ற தாம்பத்திய உறவின் வழியாகவே, இந்த கேன்சர் வரும்.
காரணம், ஹெச்.பி.வி., எனப்படும், ஹியூமன் பாப்பிலோனா வைரஸ். இந்த வைரஸ், கேன்சரை துாண்டக் கூடிய வாய்ப்புகள் உள்ளதா என்பதை பரிசோதிக்கவும், நவீன முறை உள்ளது.
கர்ப்பப்பை வாய் கேன்சர் பாதித்தால், பல நேரங்களில், அறிகுறிகளே இருக்காது. பல பெண்களுக்கு, முற்றிய நிலையிலேயே பருத்திப் பூ போல, வெளியில் தெரிய வரும்.
பாப் - ஸ்மியர் மற்றும் ஹெச்.பி.வி., வைரஸ் உள்ளதா என்பதையும் சேர்த்து பரிசோதிக்க, 3,000 ரூபாய். தவணை முறையில் செலுத்தி, சோதனை செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 30 - 65 வயது வரை உள்ள பெண்கள் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசி, பல நேரங்களில், மற்ற கேன்சரையும் தடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
டாக்டர் நந்திதா,
மகப்பேறு மருத்துவர், சென்னை.
மொபைல்: 97910 45527
