கனவு தவிர்... நிஜமாய் நில்! - உயிர் காக்கும் திரவம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - உயிர் காக்கும் திரவம்!
PUBLISHED ON : அக் 01, 2017
பெண் குழந்தைகளுக்கு, 11 வயதில் மார்பகங்கள் வளர ஆரம்பிக்கின்றன. பருவமடையும் வயதில் சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன. இதோடு மார்பகப் பகுதியில் உள்ள திசுக்கள், கொழுப்புச் சத்து சேர்ந்து, மார்பகங்கள் உருவாகின்றன.
கர்ப்ப காலத்தில், மார்பகங்கள் பெரிதாகும். சிலநேரம், சாதாரணமாக இருப்பதை விடவும் இருமடங்கு பெரிதாகலாம். பால் சுரப்பு செல்கள் பெருகுவதாலும், ரத்த நாளங்கள் விரிவடைவதாலும் இது நிகழும். கர்ப்பமாக இருக்கும் போது சுரக்கும் ஹார்மோன்களால் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும்.
பிறந்தவுடன் குழந்தையை அம்மா மேல் போடுவதால் கிடைக்கும் ஸ்பரிசம், குழந்தையின் உடல் வெப்ப நிலையை சீராக்க உதவும். இதைவிட முக்கியமான விஷயம் குழந்தையை அம்மா மேல் போட்டவுடன், தன் குழந்தை என்ற உணர்வு, அம்மாவிடம் உடனடியாக பால் சுரக்க உதவும்.
தாய்ப்பாலின் அவசியம்
குழந்தை பிறந்ததில் இருந்து, முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். மூளை வளர்ச்சிக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. முதலில் சுரக்கும் சீம்பாலில் குழந்தையின் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
முதல், இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை, மற்ற குழந்தைகளை விடவும் அறிவு கூர்மையோடு இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஓராண்டிற்குப் பின், குழந்தைக்கு ஒரு நாளில் தேவைப்படும் நுண்ணூட்டச்சத்தில், 30 சதவீதம் தாய்ப்பாலில் இருந்து கிடைக்கிறது. ஒரு நாளில் நான்கைந்து முறை பால் கொடுத்தாலும், இந்த சத்துக்கள் கிடைக்கும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் தருவது குழந்தையின்
ஆரோக்கியத்திற்கு நல்லது. மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் தர வேண்டும்.
தாய்ப்பால் தராத பெண்களுக்கு என்ன பிரச்னை வரும்?
குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதோடு, பால் கட்டி, மார்பகங்கள் இறுகி, கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை வரை செல்லும் அபாயமும் உண்டு. தாய்ப்பால் தராத பெண்களுக்கு மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்ற பிரச்னைகளும் வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், சுத்தமான கன்டெய்னர்களில், 3 முதல், 4 டிகிரி செல்ஷியசில் பிரிஜ்ஜில் வைத்து, 24 மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
டாக்டர் நித்யா ராமமூர்த்தி
மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவர், சென்னை.
nithiyaramamurthy@yahoo.in

