PUBLISHED ON : டிச 16, 2018

குழந்தைகள் முதல் முதியோர் வரை பன்றிக் காய்ச்சல் தாக்குகிறது. இது காய்ச்சல், இருமல், சளி, உடல் அசதி, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் தோன்றும்.
பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் 'எச்1 ஏ1' வைரஸ் உயிர் கொல்லி கிருமியாகும். சளி மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது.
இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் இருமும் போது கைக்குட்டை அல்லது துணியை வாயில் வைத்து கொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் சளியை கையால் துடைப்பது மற்றும் அக்கையுடன் பிற பொருளை தொடுவது கூடாது. அப்பொருட்கள் மீது பிறர் கை பட்டவுடன், அவருக்கும் பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படும். இதைத் தவிர்க்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். காய்ச்சலின் போது வீட்டில் ஓய்வு எடுத்து கொள்வது அவசியம்.
காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இத்துடன் தடுப்பூசி எடுத்து கொள்வது அவசியம். இத்தடுப்பூசி, ஆறு மாத குழந்தைகள் முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத மற்றவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி எடுத்து கொள்வது நல்லது.
காய்ச்சல் ஏற்பட்டதும் சாதாரண காய்ச்சல் தானே? என அசட்டையுடன் இருக்கக்கூடாது. ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள், புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தொற்று நோய் பகுதியில் வசிப்பவர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும்.
இதை ஆண்டு தோறும் அக்டோபரில் எடுத்து கொள்வது நலம். இத்தடுப்பூசி பக்க விளைவு ஏற்படுத்துவது இல்லை. சிலருக்கு காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.
- டாக்டர் முருகன் ஜெயராமன்
குழந்தைகள் நல நிபுணர், மதுரை
94864 67452
