PUBLISHED ON : ஜூலை 15, 2015
1 குடல் புழுக்கள் உருவாகக் காரணம் என்ன?
திறந்தவெளிக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவோருக்கு இந்த தொல்லை அடிக்கடி வருகிறது. சாப்பிடுவதற்கு முன்னால், கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது; பாக்கெட் உணவுப் பொருட்களை உண்பது, போன்றவற்றால், குடல் புழுக்கள் உருவாகின்றன.
2 குடல் புழுக்களில் வகைகள் உண்டா?
குடல் புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு என, பல வகைகள் உண்டு.
3 புழு வளரும் விதம்?
ஒவ்வொரு வகையிலும், ஆண், பெண் இனமுண்டு. பெண் புழு இடும் முட்டைகள், மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது, கை விரல் நகங்களில் புகுந்து, கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் சாப்பிடும்போது, உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று பொரிந்து, 'லார்வா' எனப்படும், சிறுபுழுக்கள் வெளிவரும்.
4 எவ்வாறு உடலில் புழுக்கள் பரவுகின்றன?
ஒவ்வொரு, 'லார்வா'வும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று, சில நாட்கள் அங்கே தங்கும். பின் அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழைந்து, பின் உணவுக் குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்துசேரும் போது, 'லார்வா' கட்டத்தில் இருந்தவை, முழு புழுக்களாக வளர்ந்துவிடும்.
5கொக்கி புழுக்கள் ஆபத்தை ஏற்படுத்தாதா?
கொக்கிப்புழுக்கள், அளவில் சிறியவை. அவற்றின் வாய் பகுதி கொக்கி போல் வளைந்திருக்கும். இவற்றின், 'லார்வா'க்கள், மனிதப் பாதத்தின் தோலைத் துளைத்துக் கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்துவிடும். இந்தப் புழு தாக்கியுள்ள நபருக்கு, வயிற்றுப் பிரச்னைகளோடு, ரத்தசோகை நோயும் ஏற்படும்.
6குடல் புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சுமா?
ஒரு கொக்கிப் புழு, தினசரி, 0.2 மில்லி ரத்தத்தை உறிஞ்சி விடும். ஒருவருடைய குடலில் ஒரே நேரத்தில், நூறு புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு. நடைமுறையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு, சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்வோருக்குக் கொக்கி புழு பாதிப்பு மிக அதிகம்.
7 நூல் புழு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும்?
குடல் புழுக்களில் அளவில் சிறியவை நூல் புழுக்கள். இவை, குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும். மற்றப் புழுக்கள் எல்லாம் குடலில் தான் முட்டை இடும். இவை மட்டும் மனிதனின் மல வாசலில் முட்டை இடுகின்றன. இதனால் அங்கு அரிப்பு ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்பு தான், இந்தப் புழுக்களால் ஏற்படுகிற பெருந்தொல்லை. இதன் விளைவாக, இரவில் தூக்கம் கெடும்.
8 சாட்டை புழு குழந்தைகளைத் அதிகம் தாக்கும் என்பது உண்மையா?
குழந்தை இரவில் அழுதால் அல்லது வயிற்றுவலி என்று சொன்னால், சாட்டைப்புழு இருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த வகைப் புழுக்கள்
பாதித்த குழந்தைகளுக்கு, அடிக்கடி வயிற்றுப்
போக்கு ஏற்படும்; பசி இருக்காது; சாப்பிட
மாட்டார்கள்; உடல் எடை குறையும்; உடல் மெலிந்து, ஒல்லியாகவும் மந்தமாகவும் இருப்பர்.
9 நாடா புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன?
நாய் வளர்ப்போர், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி உண்போருக்கு மட்டுமே, இவை தொற்றுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில், இந்த புழுக்களின், 'லார்வா'க்கள் வசிப்பதே இதற்கு காரணம். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு இதனால் வரலாம். மேற்கண்ட எல்லாப் புழுக்களுமே கண்களுக்கு தெரியும்.
10 குடல் புழுக்களை கட்டுப்படுத்த சிகிச்சை என்ன?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு, குடல் புழுக்கள் எளிதில் உருவாகிவிடும். குடல் புழுவை ஒழிக்க, பெரியவர்களுக்கு மாத்திரையாகவும், குழந்தைகளுக்கு திரவ வடிவிலும், பல மருந்துகள் கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை, மலப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால், குடல் புழுக்கள், 100 சதவீதம் அழிந்துவிடும்.
- மா.வெங்கடேசன், குழந்தைகள் நல மருத்துவர்,
சென் மருத்துவமனை, சென்னை.
98402 43833

