PUBLISHED ON : ஆக 10, 2016

எலிக் காய்ச்சல் என்றால் என்ன?
'லெப்டோஸ்பைரா' எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பால் ஏற்படும் தொற்று.
இந்த கிருமி எப்படி பரவுகிறது?
மழைக் காலத்தில் தேங்கிய மழை நீரில், எலிகள் சிறுநீர் கழிக்கும். அதில், 'லெப்டோஸ்பைரா' கிருமிகள் இருந்தால், செருப்பு அணியாமல் அந்த நீரில் நடந்தால், கிருமிகள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உண்டு.
அறிகுறிகள் என்ன?
ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் வரும். அதன்பின் கடுமையான காய்ச்சல், தீவிர தலைவலி, தசைவலி, உடல்வலி, கண்கள் சிவப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு தொற்றின் முதல்கட்ட அறிகுறிகள். இவற்றில், 'சிவந்த கண்கள்' முக்கிய அறிகுறி. மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும், மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இரண்டாம் கட்ட அறிகுறிகள்.
எலிக்காய்ச்சலால், உடல் உள் உறுப்புகள் பாதிக்கும் அபாயம் உள்ளதா?
கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை என, முக்கிய உறுப்புகளை நோய் தொற்று தாக்கும். கவனிக்கத் தவறினால், இதயம் மற்றும் மூளையைப் பாதித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்தக் காய்ச்சலை எவ்வாறு கண்டறியலாம்?
சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரில், 'லெப்டோஸ்பைரா' கிருமிகள் இருப்பதை, மைக்ரோஸ்கோப் உதவியுடன் உறுதி செய்ய முடியும்.
எம்.ஏ.டி., (Microscopic Agglutination Test MAT) எனப்படும் பரிசோதனையின் மூலம்கூட
எலிக்காய்ச்சலை கண்டறியலாம் என்கின்றனரே?
எலிக்காய்ச்சல் வந்தவருக்கு, இந்தக் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகிறதா என்பதை இதில் துல்லியமாக கண்டறிவதன் மூலம், இக்காய்ச்சலுக்கு தீர்வு காணலாம்.
நோயின் பாதிப்பை கண்டறிய உதவும் பரிசோதனைகள் உள்ளனவா?
இப்பாதிப்பின்போது, ரத்தத்தில் உள்ள எல்லா அணுக்களும் குறைய வாய்ப்புள்ளது என்பதால், முழுமையான ரத்த அணுக்கள் பரிசோதனை தேவை.
கல்லீரல் செயல்திறன் பரிசோதனை அவசியமா?
இந்நோய் தொற்றால், மஞ்சள் காமாலை ஏற்படும் அபாயம் உண்டு என்பதால், பரிசோதனை அவசியம். எலிக்காய்ச்சல் வந்தவருக்கு ரத்தத்தில் 'பிலிருபின்' அளவு அதிகமாக இருக்கும். ரத்தத்தில் கல்லீரல் சுரக்கிற நொதிமங்களை அளக்கும் பரிசோதனை இது.
மூளை தண்டுவட நீர் பரிசோதனை (CSF Test) எதற்கு?
எலிக்காய்ச்சல் மூளையைப் பாதித்திருந்தால், புரதத்தின் அளவு, அதிகமாக இருக்கும். குளூக்கோஸ் அளவு, இயல்பாக இருக்கும். இதை உறுதி செய்வதற்கு, இந்த பரிசோதனை அவசியம்.
சிகிச்சை முறைகள் பற்றி...
நோயின் தீவிரத்தைப் பொறுத்து, செப்ட்ரியாக்சோன் (ceftriaxone) எனும் ஆண்டிபயாடிக் மருந்து, ஊசி மூலம் ஏற்றப்படும்.
எஸ்.சுப்ரமணியன்,
தொற்று நோய் நிபுணர்
சென்னை
