PUBLISHED ON : பிப் 10, 2021

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க, தொல்காப்பிய காலத்திலிருந்து, வேம்பின் மருத்துவ குணத்தை தமிழர்கள் அறிந்து பயன்படுத்தி வருகின்றனர். தடுப்பு மருந்துகள் இல்லாத பழங்காலங்களில், பல வைரஸ் தாக்குதல்களை நம் சமூகம் சந்தித்து வென்றது, வேம்பின் தயவால் தான்.
'வேப்பங்காரம்' எனப்படும் வீட்டு மருந்து, நம் குழந்தைகளுக்கு தரப்பட்ட முதல் மருந்தாகும்.
துளிரான வேப்பம் கொழுந்து, 20, ஒரு சிட்டிகை சீரகம், 3 மிளகு, 1/2 பல் பூண்டு, இவைகளை சுத்தம் செய்து நசுக்கி, சிறிய சங்கில் சேர்த்து, அதில் தாய்ப்பால் அல்லது பசும்பால் விடவும். 10 நிமிடங்கள் ஊறிய பின் வடிகட்டி எடுத்த சாறு, வேப்பங்காரம் எனப்படும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, 5 மில்லி, 1 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு, 10 மில்லி அளவும், மாதம் இரண்டு முறை தரலாம்.
இதைத் தொடர்ந்து கொடுத்து வந்தாலே, குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் நுரையீரல் தொற்று, வயிற்று கோளாறுகள், பூச்சித்தொல்லை, பசியின்மை ஆகியவை தீரும்.
குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க உதவும். வேப்பங்காரம் செய்ய முடியாவிட்டால் கவலை வேண்டாம். டக்கென்று பயன்படுத்த கைகொடுக்கும் உரை மாத்திரை தயாரித்து விடலாம்.
அதற்கு அதிமதுாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், பெருங்காயம் போன்ற வீட்டு மருந்துகளை அரைத்து நீள உருளைகளாகவும், சிறிய மாத்திரைகளாகவும் உருட்டி வைத்துக் கொள்ளவும்.
இதற்கு உரை மாத்திரை என்று பெயர். முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் செய்து வைப்பர். தற்போது சித்த மருந்து கடைகளில் கிடைக்கிறது; தரமான தயாரிப்பாக பார்த்து வாங்கவும்.
இதை வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்து வர நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
இளம் வயதினருக்கு...
அமுக்குரா கிழங்கு எனப்படும் கிழங்கிலிருந்து செய்யப்படும் அமுக்குரா லேகியம், 5 - 50 வயது வரை அனைவருக்கும் ஏற்றது.
நோயை தடுக்கும் ஆற்றல், நரம்புகள், தசைகள், மூட்டுகளை தேய்மானமின்றி காக்கும்; மன அழுத்தம், உடல் சோர்வை போக்கும்.
தினமும், 5 கிராம், ஆண்டிற்கு, மூன்று மாதங்கள் மட்டும் சாப்பிட்டால் போதும்.
சர்க்கரை கோளாறு இருந்தால், சூரணம் அல்லது மாத்திரையாக சாப்பிட வேண்டும்.
முதியோர்களுக்கு...
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவை சேர்ந்த கூட்டு மருந்தே திரிபலா சூரணம். மஞ்சள் காமாலை உண்டாக்கும் வைரஸ் உட்பட பலவிதமான கிருமிகளை தடுக்கும் ஆற்றல், இதற்கு உண்டு.
நவீன அறிவியல் ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டிற்கு, 3 மாதங்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், சமச்சீரான நோய் எதிர்ப்பு திறன் பெறலாம்.
தினமும், 2 - 5 கிராம் வரை சாப்பிடலாம்.
தும்மல் வந்தாலே, மருத்துவர்களின் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் நாம், பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்த துவங்கலாம்.
மூலிகைமணி டாக்டர் க.வே.அபிராமி,
சித்த மருத்துவர், சென்னை.
96000 10696
