PUBLISHED ON : ஜூலை 10, 2022

குழந்தை பிறந்த ஆறு மாதம் முதல், 6 வயது வரை முளைப்பவை பால் பற்கள். அவை விழுந்து முளைப்பவை நிரந்தர பற்கள். இவற்றின் ஆரோக்கியம், பால் பற்களின் பராமரிப்பில் தான் உள்ளது. ஆனால், நம்மிடம் உள்ள தவறான எண்ணம், பால் பற்கள் தானே என்று சரியாக பராமரிக்காமல் விட்டு விடுகிறோம்.
இரவில் துாங்கும் நேரத்தில் தாய்ப்பால் குடித்துக் கொண்டே துாங்குவது, பால் பாட்டிலைவாயில் வைத்து சப்பியபடி துாங்குவது இவற்றை பழக்கவே கூடாது. பல் சொத்தை ஏற்படுத்துவதில் பிரதானமாக இருப்பது இந்த பழக்கங்கள்.
வாய்ப்பு அதிகம்
தொடர்ந்து இது போன்று இருந்தால், பால் பற்கள் அனைத்திலும் சொத்தை ஏற்பட்டு, 2 வயதாகும் போது ஒரு பல்கூட மிஞ்சாது. சொத்தையால், பற்களின் நிறம் மாறி கறுப்பாக இருக்கும். பொதுவாக, முதல் இரண்டு ஆண்டுகளில் பெரிதாக பிரச்னை எதுவும் வராது. பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது தான், பிரச்னை இருப்பது தெரிய வரும்.
பல்லில் சொத்தை அதிகம் இருந்தால், அந்த இடத்தில் பெரியவர்களுக்கு செய்வது போல, 'ரூட் கேனால்' சிகிச்சையில், ஈறுகளின் உள்ளே, பல்லின் அடிப்பகுதியில், சொத்தை ஏற்பட்ட பகுதியை சரி செய்து, 'கேப்' போட வேண்டும்.
நிரந்தரமான பல், 6 வயதில் தான் முளைக்க ஆரம்பிக்கும். அதுவரையிலும் அந்த இடம் இடைவெளி யுடன் இருந்தால், பக்கத்தில் வளர வேண்டிய பல், இந்த இடத்தில் இடம் மாறி முளைப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
சுவாச பிரச்னை
ஆறு மாதத்தில் துவங்கி, 12 வயது வரை, ஒவ்வொரு பல்லும் குறிப்பிட்ட வயதில் விழுந்து, அந்த இடத்தில் நிரந்தர பற்கள் முளைக்கும். சொத்தை அதிகமாகி, பல்லை எடுக்க வேண்டிய கட்டாயத்தில், பல் எடுத்த இடத்திற்கு, அதன் பக்கத்தில் உள்ள பல் நகராமல் இருப்பதற்கான 'ஸ்பேஸ் மெயின்டனனன்ஸ்' செய்ய வேண்டியது அவசியம்.
சொத்தை பல்லை இயல்பாக விழ வேண்டிய வயதிற்கு முன் எடுத்து, அந்த இடத்தை அப்படியே விட்டால், பக்கத்தில் இருக்கும் பல், இடம் மாறி, அந்த இடத்திற்கு வந்து விடலாம். இதனால், சீரான வரிசையில் பற்கள் இல்லாமல் இருப்பது, முன் பக்கம் துாக்கலாக முளைப்பது, ஒரு பல் மேல் இன்னொரு பல் முளைப்பது போன்ற பிரச்னைகள் வரலாம்.
இதுதவிர, சொத்தை இல்லாவிட்டாலும், எந்த வயதில் பால் பல் விழுந்து, நிரந்தர பல் முளைக்க வேண்டுமோ, அந்த வயதில் தான் முளைக்க வேண்டும். அப்படி விழாத பட்சத்தில், அந்த இடத்தில் முளைக்க வேண்டிய நிரந்தர பல், முளைக்க இடம் இல்லாமல், நாக்கை ஒட்டியோ, ஈறுகளின் பக்கவாட்டில் உள்பக்கம் அல்லது வெளிப்பக்கமாகவோ இடம் மாறி முளைக்கலாம்.
பால் பற்கள் இருக்கும் போதே, பல் சொத்தை இல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், எந்தப் பிரச்னையும் இருக்காது. இது தவிர, குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், உதடு கடிப்பது, வாயால் மூச்சு விடுவது, விரல் சப்புவது போன்ற பழக்கங்கள் இருந்தால், தெத்து பல், சுவாச பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. விரல் சப்பும் பழக்கம் இருந்தால், 2 வயதிற்குள் மாறி விட வேண்டும்.
குழந்தைக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் முன்னதாகவே, ஈறுகளை சுத்தம் செய்வது முக்கியம். காலையில் எழுந்ததும், குழந்தையை பராமரிப்பவர்கள், தங்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின், குழந்தையின் ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து, ஒரு மிடறு தண்ணீர் குடிக்க தர வேண்டும்.
மிகவும் அவசியம்
இரவில் தரும் பாலில் சர்க்கரை அளவை குறைவாக தரலாம். பிரஷ் செய்ய முடியாத வயதில் இருக்கும் குழந்தைக்கு, இரவில் பால் குடித்த பின், ஒரு மிடறு தண்ணீர் குடிக்கத் தருவது, பாலில் உள்ள சர்க்கரை பற்களில் தங்கி, சொத்தை ஏற்படுத்துவதை தடுக்கும்.
பற்கள் முளைக்கத் துவங்கியதும், விரல்களில் பொருத்தக்கூடிய 'டூத் பிரஷ்' உதவியுடன் பற்களை சுத்தம் செய்யலாம். பற்கள் தவிர, ஈறுகள், நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
வளரும் குழந்தைகளுக்கு 'சாக்லேட், கேக்' போன்ற அதிக சர்க்கரை உள்ள உணவுகள் தருவதை தவிர்க்க வேண்டும். ஆறு மாதம் அல்லது ஆண்டிற்கு ஒரு முறை பல் டாக்டரிடம் காட்டி, சொத்தை இருந்தால், தேவையான சிகிச்சை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
டாக்டர் ஷீபா சம்சுதீன்,
பல் மருத்துவர்,
சென்னை
97869 29892
