PUBLISHED ON : அக் 31, 2021

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்படக் கூடிய பொதுவான பிரச்னை. முழுவதுமாக குழந்தை பாலைக் குடிக்காததால், பால் கட்டி, மார்பகங்களில் வீக்கம் ஏற்படுவது. சில சமயம், மார்பு காம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு புண் ஆகிவிடும்; இதனால் வலி ஏற்படும். இந்த வலியால், பால் கொடுப்பதை தவிர்த்து விடுவர். இதனால் பால் கட்டி, மேலும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
மார்பு காம்பு ஏன் வெடித்து, புண்ணாகி விடுகிறது என்று பார்த்தால், சரியான விதத்தில் குழந்தை பால் குடிக்காததால் தான். மார்பு காம்பின் நுனியை மட்டும் பற்றி, குழந்தை பாலை உறிஞ்சுவதால் புண்ணாகி விடுகிறது.
இந்த புண்ணிற்கு தீர்வும் தாய்ப்பால் தான். தாய்ப்பாலை ஒரு சொட்டு எடுத்து, புண்ணின் மேல் தடவினால் ஆறிவிடும். அவசியம் என்றால் மட்டுமே, வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம்.
பால் கொடுப்பதற்கு முன் ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால், மரத்து விடும்; இது தற்காலிக தீர்வு. பால் கொடுத்த பின், வென்னீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
மார்பு காம்புகளில் புண் ஏற்படும் போது, சில சமயங்களில் கிருமிகள் வளர்ந்து தொற்று ஏற்படலாம். காம்பு வீங்கி, சிவந்து, காய்ச்சல் வரலாம்.
இதற்கு ஆன்டிபயாடிக் மருந்து தர வேண்டும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சில ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுக்கக் கூடாது. அதனால், மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே மருந்து சாப்பிட வேண்டும்.
சில சமயங்களில் சீழ் கட்டி விடும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தால், சீழ் கட்டி உள்ளதா என்று தெரிந்து விடும். அந்த இடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்து, ஊசி வாயிலாக சீழ் கட்டியை எடுத்து விடலாம்.
ஊசி வாயிலாக எடுக்க முடியாத பட்சத்தில், ஆப்பரேஷன் செய்து, சீழ் கட்டியை எடுத்து விடுவோம். எடுத்த திரவத்தை பரிசோதனை செய்து, என்ன கிருமியால், இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது என்று தெரிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை செய்ய வேண்டும்.
மிக மிக அரிதாகவே, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, மார்பகத்தில் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு உண்டு. மிக அரிது தான் என்றாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா,
மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவர்,
சென்னை.
selvi.breastclinic@gmail.com
