தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தலைமுடியை ருசி பார்க்கும் மன அழுத்தம்!

தலைமுடியை ருசி பார்க்கும் மன அழுத்தம்!

தலைமுடியை ருசி பார்க்கும் மன அழுத்தம்!


PUBLISHED ON : ஆக 09, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமும், 0.4 மி.மீ., அளவிற்கு தலைமுடி வளரும். பொதுவாக தலைமுடியில், 85 சதவீதம், 'அனாகேன்' எனப்படும் வளரும் நிலையில் இருக்கும்; 15 சதவீத தலைமுடி ஓய்வு நிலையிலும், மீதி உள்ள ஒன்றிரண்டு சதவீத தலைமுடி தான், உதிரும் நிலையில் இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஆண்டில் மூன்று மாதங்கள் தலைமுடி அதிக அளவில் உதிர்ந்து, புதிதாக முளைக்கும். இது, அவரவரின் உடல் நிலையை பொறுத்து, எந்த மூன்று மாதங்களாகவும் இருக்கலாம். இது தான் முடியின் பொதுவான இயல்பு.

முடி உதிர்வதை பிரச்னையாக எப்போது பார்க்க வேண்டும்?

ஓய்வில் இருக்கும் முடி, நீண்ட நாட்கள் ஓய்விலேயே இருந்தால், எதிர்பாராத விதமாக உதிர ஆரம்பிக்கும். அதேபோன்று, சிலருக்கு உதிரும் நிலையில உள்ள தலைமுடியின் சதவீதம் அதிகமானாலும் முடி உதிரும்.

முடி உதிர்வது அல்லது கொட்டுவது என்பது, 30 - 60 வயது வரை அதிகஅளவில் இருக்கும்.

இதிலும், தற்காலிகமாக முடி உதிர்வதும் உண்டு; நிரந்தரமாக வழுக்கை விழுவதும் உண்டு. இதிலும், சிலருக்கு தலையில் மட்டும் முடி உதிரும்; உடம்பு முழுதும் முடி உதிர்வதும் ஏற்படலாம்.

உடல் பிரச்னை

காரணங்கள் என்று பார்த்தால், குடும்ப பின்னணி முக்கியமாக பார்க்க வேண்டும். பரம்பரையாக மரபணுவில் இந்த தன்மை இருப்பதும் ஒரு காரணம். ஆண்களுக்கு, 'டெஸ்டோஸ்டிரோன்' என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்தால், தலையில் முடி உதிரும். உடலின் மற்ற பகுதிகளில் அதிக அடர்த்தியாக வளரும்.

சில பெண் குழந்தைகள், குறிப்பிட்ட வயதிற்கு முன், வயதிற்கு வந்து விடுவது, முடி உதிர்வை அதிகரிக்கும். போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும், தலைமுடி வழக்கத்திற்கு மாறாக, அதிக எண்ணிக்கையில் உதிரும்.

நீண்ட நாட்கள் சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு போன்ற உடல் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு, எப்படி, 'கொரோனா' வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதிக பாதிப்பு இருக்குமோ, அதே போன்று, நீண்ட நாள் உடல் பிரச்னை இருந்தால், முடி உதிரும்.

குழந்தை பெற்ற பின், அடுத்த சில மாதங்கள், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டு, திடீரென நிறுத்தும் போது ஏற்படும் ஹார்மோன் தன்மை ஆகிய காரணங்களால், முடி அதிக அளவில் உதிரலாம்.

இது தவிர, தைராய்டு பிரச்னை, தலையில் பூஞ்சை தொற்று, சில தோல் நோய்கள், 'ஆட்டோ இம்யூன் டிசீஸ்' எனப்படும் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களில், நம் உடலில் உள்ள செல்களை அழிக்கும் பிரச்னை இருப்பவர்களுக்கு, கேன்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது, தலைமுடி உதிரும்.

மன நோய்களுக்கு நீண்ட நாட்கள் மாத்திரை சாப்பிடுவதாலும் முடி உதிரலாம். சில மன நோயாளிகளுக்கு, தலையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட பகுதியில் தலைமுடியின் அளவு குறைந்து இருக்கும். இவர்கள், தங்கள் முடியை தாங்களாகவே பிடுங்கி அல்லது பாதி பாதியாக கைகளால் பிடுங்கி விடும் பழக்கம் உள்ளவர்கள்.

இப்படி பிடுங்கிய முடியை, பலர் சாப்பிட்டு விடுவது உண்டு. இவர்கள் தலையில் மட்டுமல்லாமல் கண் இமைகள், புருவம் இவற்றில் இருக்கும் முடியையும் பிடுங்கி சாப்பிடுவர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின், வயிறு வலி என்று சொல்லும் இவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து பார்த்தால், வயிற்றில் கட்டியாக முடி உருண்டை இருக்கும்.

மன அழுத்தம் இருப்பவர்களுக்கு, தலை முடி சாப்பிடும் பழக்கம் இருப்பது பொதுவானது. உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று, பல வித, 'டயட்' முறைகளை பின்பற்றினாலும், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, முடி கொட்டும்.

பரிசோதனை

முடி உதிர்வதற்கு காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை தர வேண்டும். அடிப்படையான ரத்தப் பரிசோதனை செய்து, ஹீமோகுளோபின் அளவு மற்றும் தைராய்டு சுரப்பு சமச்சீராக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஊட்டச்சத்துடன், நுண்ணுாட்ட சத்துக்களும் முடி வளர்ச்சிக்கு தேவை. இவை, மிக குறைந்த அளவு தேவைப்படும் என்றாலும், அவை கிடைக்காவிட்டால், முடி உதிர ஆரம்பிக்கும்.

'அலோபேசியா அரேட்டா' என்று சொல்லப்படும், தலையில் ஆங்காங்கே முடி உதிர்ந்து, வழுக்கையாக தெரியும் பிரச்னை, குழந்தைகளுக்கு அதிகம் வருகிறது. மருந்து, மாத்திரைகள், மாதம் ஒரு முறை செய்யும், 'பிளாஸ்மா' சிகிச்சை போன்றவை நல்ல பலன் தரக் கூடியவை. 'முடி உதிர்வதை தடுத்து, முடி வளர்ச்சிக்கு நாங்கள் இதை செய்கிறோம், அதை செய்கிறோம்' என்று விளம்பரப்படுத்துதல் நடக்கிறது.

இது போன்ற இடங்களுக்கு சென்று ஏமாறாமல், டாக்டரிடம் ஆலோசனை பெறுவது தான் பாதுகாப்பானது. அழகுக்கலை நிலையத்தில் சிகிச்சை எடுக்கவே கூடாது.

பராமரிப்பு

இறுக்கமாக முடியை கட்டுவது, பின்னுவது வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு இது போன்று செய்வதால், முன் பக்கத்தில் முடி கொட்டி, நெற்றி அகலமாக தெரியும். 'ஹேர் பேன்ட், கிளிப்' கூட இறுக்கமாக போடக் கூடாது; முடியை மென்மையாக கையாள வேண்டும்.

ஷாம்பூ, சிகைக்காய் ஆகியவற்றை அழுத்தி தேய்க்காமல், லேசாக தேய்த்து கழுவினால் போதும்; அழுக்கு போய் விடும். 'சல்பர்' இல்லாத ஷாம்பூ மட்டும் பயன்படுத்த வேண்டும். முடியை நீளமாக்குவது, சுருள் முடியாக மாற்றுவது ஆகியவற்றை செய்யவே கூடாது; அப்படி செய்தால், காலப்போக்கில் முடி கொட்டுவது நிரந்தர பிரச்னையாகும்.

தலைக்கு குளித்தால், மின் விசிறி அல்லது வெயிலில் காய வைக்க வேண்டுமே தவிர, 'டிரையர்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளீச்சிங், முடிக்கு தினமும் ஒரு நிறம் போடுவது, அந்த நிறத்தில் உள்ள, 'பிபிபி' எனப்படும் வேதிப்பொருள், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

'டயட்'

சிறிய வயதிலேயே நரை முடி வருவதற்கு, மரபியல் மற்றும் உணவுப் பழக்கங்களும் காரணங்களாகும். மரபணு காரணம் என்றால், மாற்றவும் முடியாது. வெள்ளை முடியை மறைக்க, 'டை' பயன்படுத்தினால், முடி கறுப்பாக மாறுவதோடு, முகம் கறுத்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இவர்களுக்கு, தோலில் அலர்ஜி, அரிப்பு ஏற்படும். முதலில் தலையில் ஆரம்பித்து, உடல் முழுதும் பரவி, உச்சி முதல் உள்ளங்கால் வரை அரிப்பு வரும்; தோல் தடித்து கறுப்பாக மரும். ஒரு முறை, 'டை' போட்டு அலர்ஜி ஏற்பட்டால், மீண்டும் பயன்படுத்தவே கூடாது.

புரதம், இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர் கே.சினேகலதா,

தோல் நோய் மருத்துவர், சென்னை.

99419 39309


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us