PUBLISHED ON : ஜன 26, 2020

சாப்பிட்டு முடித்ததும் உணவு செரிமானம் ஆகாமல் வயிறு மந்தமாக காற்று அடைத்தது போல் உள்ளது. இதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மருந்து உண்டா?
இதனை சித்த மருத்துவம் உப்புசம் அல்லது கல்மாந்தம் என்கிறது. ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு, மிளகு அளவு பெருங்காய கட்டி, எட்டு சீரகம், பட்டாணி அளவு கருப்பட்டி ஆகியவற்றை நன்கு இடித்து அல்லது அரைத்து உருட்டி உணவு உண்டபின் வாயில் போட்டு மென்றால் நன்கு
செரிமானமாகும். தயிர் சாதம் சாப்பிட்ட உடன் அரை தேக்கரண்டி ஓமம் விதைகள் அரைத்த பொடியை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வயிறு உப்புசம் குறையும்.
எனக்கு ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்புஏற்பட்டு உட்கார்ந்து மலம் கழிக்கும் போதுவலி உண்டாகிறது. மருத்துவம் உண்டா?
ஒரு சிறு துண்டு படிகாரத்தை வெந்நீரில் போட்டு கரைத்து தினமும் ஆசன வாய்பகுதியை கழுவி வர வேண்டும். மஞ்சள் பொடியை விளக்கெண்ணெய் உடன் கலந்து மலவாய் பகுதியில் தடவலாம். நார்ச்சத்து உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இரவு படுக்கும் போது திரிபலா சூரணம் ஒரு கரண்டி வெந்நீரில் சாப்பிட்டுவரலாம்.
எனக்கு நீண்ட நாட்களாக மூக்கடைப்பு உள்ளது. தற்சமயம் மூக்கில் வாசனையும்
தெரியவில்லை. என்ன செய்யலாம்?
சுக்கு, திப்பிலி, சுண்டை வேர் மற்றும்அக்கிரகாரம் ஆகியவற்றை பொடித்து ஒரு
துணியில் முடிந்து அடிக்கடி முகர்ந்து வருவதுடன், வால் மிளகை பொடித்து வெந்நீரில் குழப்பி நெற்றி மூக்கு மற்றும் கன்னத்தில் பற்றுப்போட்டு வந்தால் மூக்கு பாதையில் ஏற்பட்ட ஒவ்வாமையினால் உண்டான சதை பீனிசம் நீங்கி வாசனை தெரிய ஆரம்பிக்கும்.
எனக்கு பல்லில் வலி அதிகம் உள்ளது. ஈறுவீக்கம் காணப்படுகிறது. இதயநோய் உள்ளதால் தற்சமயம் பல் பிடுங்க முடியவில்லை. வலி குறைய என்ன செய்யலாம்?
ஐந்து மில்லி நல்லெண்ணெயை சூடு செய்து அதில் சிறு துண்டு பச்சை கற்பூரம் மற்றும் ஒரு கிராம்பு போட்டு, கற்பூரம் கரைந்ததும் பஞ்சை அந்த எண்ணெய்யில் நனைத்து வலி உள்ள இடத்தில் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வைத்து எச்சிலைத் துப்பி வர வலி குறையும்.
கால் ஆணி அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு மருந்து இருக்கிறதா?
தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் கால் ஆணியை தவிர்க்கலாம். வாரம் இரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. குளிக்கும்போது பாதத்தை அரப்புத்துாளால் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிறு துண்டு சோப்பை மஞ்சள் மற்றும் சிறிதளவு சுண்ணாம்புடன் குழைத்து கால் ஆணி மேல் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வர ஆணியின் கடினம் மாறி கரைய ஆரம்பிக்கும்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
சித்த மருத்துவர், மதுரை
98421 67567
