உடல் ரீதியாக பிரச்னை இல்லாதவர்களுக்கு சிசேரியன் செய்ய அவசியம் இல்லை
உடல் ரீதியாக பிரச்னை இல்லாதவர்களுக்கு சிசேரியன் செய்ய அவசியம் இல்லை
PUBLISHED ON : அக் 21, 2019

சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்க காரணம்?
வாழ்க்கை முறை மாற்றங்களால், திருமணமாகி எட்டு, ஒன்பது ஆண்டுகளாகியும் குழந்தை பேறு இல்லாதவர்கள், ஐ.வி.எப்., எனப்படும், செயற்கை முறை கருத்தரிப்பில், குழந்தை பெறுகின்றனர். சமீப ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பல ஆண்டுகள் கழித்து குழந்தை உண்டாகும் பெண்களுக்கு, எதிர்பார்ப்புகளுடன் சேர்ந்து, மன அழுத்தமும் அதிகம் ஏற்படும். இப்படிப்படட நிலையில் டாக்டர்களே, 'ரிஸ்க்' எடுக்க விரும்புவதில்லை. சிசேரியன் செய்ய, சிபாரிசு செய்கின்றனர்.
எல்லா நிலையிலும் சுகப் பிரசவம் சாத்தியமா?
ஒரு கர்ப்பிணிக்கு, உடல் ரீதியில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால், சிசேரியன் செய்வதற்கு அவசியமே இல்லை. நீரிழிவு கோளாறு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவை பிரசவ நேரத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தொடர் மருத்துவ கண்காணிப்பில், இவர்களுக்கும் சுகப் பிரசவம் சாத்தியமே!
பிரச்னை இருந்தால் என்ன செய்யலாம்?
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு இருப்பவர்களுக்கு, இயல்பான பிரசவ தேதிக்கு இரு வாரங்களுக்கு முன், அதாவது, 38வது வாரத்தில், 'ஜெல்' வைத்து, பிரசவ வலியை ஏற்படுத்தி, சுகப் பிரசவத்தில் குழந்தை பெற செய்வோம். 36 வாரங்களிலேயே, குழந்தை முழுமையான வளர்ச்சி பெற்று விடும். எனவே, அதிக அபாயத்தில் இருப்பவர்களுக்கு, 40 வாரங்களில், இயற்கையாக பிரசவ வலி வரும் வரை காத்திருக்கக் கூடாது. இதனால், குழந்தையின் இதயத்துடிப்பு நின்று விடலாம்.
துவக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்...
தாயிடம் இருந்து, குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம், சீராக இருக்கிறதா என்பதை, அதற்கான, 'டாப்ளர்' பரிசோதனை செய்து, தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். குழந்தையின் அசைவுகள் எப்படி இருக்கிறது, இருக்கும் என்பதை, தாய்க்கு சொல்லித் தர வேண்டும்.
சுகப் பிரசவம் ஆக செய்ய வேண்டியது?
ஐ.வி.எப்., முறையில் கர்ப்பம் தரித்தால், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், ஓய்வாக இருக்கச் சொல்கின்றனர். இதெல்லாம் தேவையே இல்லை. இயற்கையான முறையில் கர்ப்பம் தரித்தவர்கள் எப்படி இருக்கின்றனரோ அதேபோல், இவர்களும் இருக்கலாம்.சிலருக்கு, கர்ப்பப்பையின் வாய் சிறியதாக இருந்து, அந்தப் பகுதியில் தையல் போட்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும். அதற்காக, முழு ஓய்வில் இருக்க வேண்டியதில்லை. முதல் வாரத்தில் இருந்தே, தினமும் அரை மணி நேரமாவது, நடை பயிற்சி செய்ய வேண்டும். 12 வாரங்கள் கழித்து, தினமும் ஒரு மணி நேரம் நடக்கலாம்.கர்ப்ப காலம் முழுவதும், அவரவரின் உடல் அமைப்பு, உயரத்தைப் பொறுத்து, 9 - 12 கிலோ உடல் எடை அதிகரிக்கலாம். மூச்சுப் பயிற்சி, கர்ப்பிணிக்கான பிரத்யேக உடற்பயிற்சியை சொல்லி தருவோம்.
சிசேரியனை எதற்காக தேர்வு செய்கின்றனர்?
நாள், நட்சத்திரம் பார்த்து, குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என, பெற்றோர் விரும்புகின்றனர். இயற்கையான முறையில் பிரசவிப்பதே, தாயின் உடல் நலத்திற்கு நல்லது என்பதை விளக்கிச் சொல்கிறோம். பிரசவ வலிக்கு பயந்து, சிசேரியன் செய்யச் சொல்பவர்களும் உள்ளனர். இவர்களுக்கும், தீர்வு உள்ளது. 'எப்பிடுயூரல் அனால்ஜிசியா' என்ற ஊசியை செலுத்தினால், பிரசவ வலி அவ்வப்போது வரும். நடப்பது, கை, கால்களை அசைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதே நேரத்தில், வலியை அவர்களால் உணர முடியாது; பயமும் போய்விடும்.
டாக்டர் பத்மப்ரியா விவேக்
மகப்பேறு சிறப்பு மருத்துவர்
குளோபல் ஹெல்த் சிட்டி
சென்னை
044 - 44777000
