தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாத்தியோசி

மாத்தியோசி

மாத்தியோசி


PUBLISHED ON : நவ 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

இனிப்பு அதிகம் சாப்பிடவில்லை எனில் சர்க்கரை நோய் வராது. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் இருந்தாலும், சர்க்கரை நோய் குறித்து சரியான புரிதல் ஏற்படவில்லை.



அதிகம் இனிப்பு சாப்பிடுவதால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விடாது. ஒருவர் இனிப்பே சாப்பிடுவதில்லை என்பதால், அவருக்கு சர்க்கரை நோய் வராது என்று சொல்லவும் முடியாது. கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்காமல் போனால், அல்லது குறைவாக சுரந்தால், அவர் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் கூட, சர்க்கரை நோய் வரும். இன்சுலின் இயல்பாக சுரக்கும் தன்மை கொண்ட ஒருவர், இனிப்பு அதிகம் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது. ஆனால், அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரித்து, அது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்து விடும்.



சர்க்கரை நோய் தொற்று நோயா?



சர்க்கரை நோய், தொற்று நோய் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். கணவனுக்கு இருந்தால் மனைவிக்கு சர்க்கரை நோய் தொற்றி விடாது. ஆனால், பாரம்பரியத்தில் தாத்தாவுக்கு சர்க்கரை நோய் இருந்தால், பேரனுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.



சர்க்கரை நோயாளிகள் அனைவரும், இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?



முதல் வகை சர்க்கரை நோயாளிகள் (ஜுவனைல் டயாபடிக்), இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ முடியாது. ஆனால், இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் ஊசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு, மாத்திரைகள் எடுக்காமலேயே, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும் உண்டு. சர்க்கரை நோயை, 24 மணி நேரமும், வாரம் முழுவதும், மாதத்தில் முப்பது நாள்களும், ஆண்டு முழுவதும், ஆயுட்காலம் வரை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, மருத்துவரின் அறிவுரைப்படி ரத்தப் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயால், கண், சிறுநீரகம், கால் நரம்புகள், ரத்தக் குழாய்கள், இதயம், மூளை மற்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மயக்க நிலைக்கு சென்று விடுவர். சர்க்கரை நோய் ஒரு தொடர் நோய், சில நாள்களுக்குள் அல்லது சில வாரங்களுக்குள் அல்லது சில ஆண்டுகளில் குணமாகும் நோய் அல்ல. எனவே, வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அவசியம்.



இன்சுலினை வாய் வழியாக எடுத்துக் கொள்ள முடியுமா?



முடியாது. இன்சுலினை ஊசி மூலமே எடுத்துக் கொள்ள முடியும். வாய் வழியாக அல்லது வேறு வழியில் இன்சுலினை உட்கொள்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இன்சுலின் மாத்திரைகள் அல்ல. அது இன்சுலின் சுரப்பை தூண்டும் மாத்திரைகள்.



சர்க்கரை நோய் உயிர்க்கொல்லி நோய் அல்ல



தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை சர்க்கரை நோயால் ஆபத்தில்லை. ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாவிட்டால், கண், இதயம், சிறுநீரகம், கால்கள் என எல்லா உறுப்புகளையும் பாதித்து உயிருக்கு உலை வைத்துவிடும்.



சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது: சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆங்கில மருத்துவம் அல்லாத பிற மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்துகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், முழுமையாக குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்படவில்லை. சித்த மருத்துவத்தில் உள்ள மதுமேக சூரணம் நல்ல மருந்து என சொல்லப்பட்டாலும், எல்லாம் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us