PUBLISHED ON : மார் 31, 2019

பத்து ஆண்டுகளுக்கு முன், கச்சேரி முடிவில், என்னை சந்தித்த, சிறுவன், என் கண்களை நேராகப் பார்த்து, 'நீங்கள் ஒரு ஸ்வரம் தவறாக பாடினீர்கள்' என்றான். அமைதியாக இதை எதிர்கொள்ள, நான் முயற்சித்த வினாடியில், அவன் அம்மா, 'ஆட்டிசம் பாதித்த குழந்தை அவன்; நினைப்பதை, உணர்வதை அப்படியே சொல்லி விடுவான்...' என்றார், தர்மசங்கடத்துடன்.
ஆட்டிசம் என்ற வார்த்தையை, முதன் முறையாக அன்று தான் கேட்டேன். அன்று மாலை, என் கச்சேரி ரெக்கார்டிங்கை கேட்டேன். அவன் சொன்னது சரி தான். ஒரு ஸ்வரம் தவறாகவே பாடியிருந்தேன். இந்த நிகழ்விற்கு பின், பல இரவுகள் என்னால் துாங்க முடியவில்லை.
ஒரு நிலைக்கு வந்த பின், செய்யும் தவறு எனக்கு தெரியவில்லையோ, மற்றவர்கள் சொல்வதை மட்டுமே நம்பி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள மறந்து விட்டேனோ? பாராட்டுபவர்களை விட, இந்த பையன் தான், என் மேல் உண்மையான அன்பு கொண்டவன்.
ஆட்டிசம் பாதித்த, இன்னொரு, 4 வயது குழந்தை, நீலாம்பரி ராகத்தை, அற்புதமாகப் பாடியது. அதன் பின், ஆட்டிசம் குழந்தைகளிடம், இசை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தீவிரமாக சிந்திக்க துவங்கினேன்.
நானும், என் மாணவியரும் இணைந்து, சிறப்பு குழந்தைகளுக்கான, 'ஹிதம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, இசை வகுப்புகளை நடத்துகிறோம்.
கர்னாடக இசை, ஆட்டிசம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முதன் முறையாக இசையை கேட்கும் குழந்தையும், வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாத குழந்தைகளும் ராகம், ஆலாபனை, ஸ்வரத்தை, சப்தத்தின் வழியே, சரியாக வெளிப்படுத்துகின்றனர். இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
ஒரு விஷயத்தை, பல முறை இவர்களுக்கு கற்றுத் தர வேண்டியிருக்கும். கற்ற பின், அவர்கள் வெளிப்படுத்தும் போது, நாம் சொல்லிக் கொடுத்ததைக் காட்டிலும், பல மடங்கு அழகாக, அவர்கள் கற்பனையையும் சேர்த்து வெளிப்படுத்துவர்.
இசை கற்க துவங்கிய பின், நேர்மறையான பல மாற்றங்கள் நிகழ்வதாக, சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் கூறுகின்றனர்.
பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், கர்னாடக இசைக் கலைஞர்
