PUBLISHED ON : ஜன 03, 2016
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், வேளை தவறி உண்ணும் துரித உணவுகளால், பலரின் உடல் கெட்டுக் கிடக்கிறது. அனைவருக்கும் 'ஜிம்' சென்று உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது. ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை விட, நடைப்பயிற்சி சிறந்தது. நடப்பதற்கு முன் கோதுமை பிரட், வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். முழுமையாக வயிற்றை நிரப்புவதாக இல்லாமல், குறைந்த அளவாக இருக்க வேண்டும்.
கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது. நடப்பதற்கு, 1 மணி நேரத்துக்கு முன்னதாக சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் நீர் அருந்த வேண்டும்.
நடக்கும்பொழுது மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால், நமது தசையும், மூட்டுக்களும் நடைக்கு தயாராகும். அதேபோல் நமது இதயத்தின் செயல்பாடும், ரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இது உடலுக்கு நல்லது.
நடையின் முடிவில், 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து, மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும், ரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர், 10 நிமிட நடையில், 1 கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால், இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும். பளு இல்லா நடையே சிறந்தது. கைகளில் எடையுடன் நடந்தால், நடப்பதில் சிரமம் ஏற்படும்.
ரத்த அழுத்தம் கூடும். மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம். தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது. பிற பயிற்சிகளை விட, நடைப்பயிற்சியே சிறந்தது. இப்பயிற்சியின்போது உடலின் அனைத்து அவயங்களும் செயல்படுத்தப்படுவதுதான் காரணம்.
