'ரத்தக்கொதிப்புக்கும், குறட்டைக்கும் என்ன சம்பந்தம்?'
'ரத்தக்கொதிப்புக்கும், குறட்டைக்கும் என்ன சம்பந்தம்?'
PUBLISHED ON : அக் 13, 2013

எனக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது. மருந்துகள் எடுத்தும் கட்டுப்பாட்டில் இல்லை. டாக்டர் என்னிடம், குறட்டை விடுவீர்களா என்று கேட்டார். குறட்டை விடுவதற்கும், ரத்தக்கொதிப்புக்கும் சம்பந்தம் உள்ளதா?
பொதுவாக குறட்டை அதிகமாக விடுவதற்கு காரணம், 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' அல்லது, யு.ஏ.ஆர்.எஸ்., (அப்பர் ஏர்வே ரெசிஸ்டன்ஸ் சிண்ட்ரோம்) என்ற தொந்தரவால் இருக்கலாம். இதனால், நம் உடலில், பல பாதிப்புகள் ஏற்படும். இதயம், நுரையீரல், சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாமை, இல்லற வாழ்வில் இயலாமை, இவை அனைத்துமே, இந்த குறட்டையால் வரும் பிரச்னை.எனவே குறட்டை சத்தம் பெரிதாக இருக்கும் பட்சத்தில், அது எதனால் ஏற்படுகிறது என பரிசோதித்து, அதற்கான தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது நல்லது.
உங்களுடைய ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கு, நீங்கள் குறட்டை விடுபவராயின், உங்களுக்கு, ஓ.எஸ்.ஏ., என்ற பிரச்னை இருப்பின், அதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். அதனால்தான் டாக்டர் உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்டு இருப்பார்.
எனக்கு, நுரையீரலில் பூஞ்சை வளர்ந்து இருப்பதாக, டாக்டர் கூறினார். இதனால் சளி, இருமல், இளைப்பு போன்ற உபாதைகள் அதிகமாக உள்ளன. இதை எவ்வாறு குணப்படுத்தலாம்?
'ஆஸ்பர்ஜிலோஸிஸ்' எனும் பூஞ்சைதான் பொதுவாக நுரையீரலை பாதிக்கிறது. கட்டுப்படுத்தப்படாத ஆஸ்துமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எச்.ஐ.வி., பாதிப்புள்ளவர்களுக்கு, இவ்வகை நுரையீரல் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின், தக்க மருந்துகள் கொடுத்து, அதை சரி செய்ய வேண்டும். சரியாக கவனிக்கா விட்டால், நிமோனியா போன்ற தொந்தரவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக என்ன பிரச்னை என பரிசோதனை செய்து, அதற்குரிய சரியான மருந்துகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை
