தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/நூறு வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?

நூறு வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?

நூறு வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?


PUBLISHED ON : பிப் 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சர்க்கரை கோளாறால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என்று சொன்னால், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை; அதேநேரம், தங்கள் குடும்பத்தில், ஒருவருக்கு சர்க்கரை கோளாறு இருப்பது உறுதியானால், அதீத பயம், பதற்றத்துடன், அந்த செய்தியை எதிர்கொள்கின்றனர்.

'இனி, பிடித்த உணவு எதையும் சாப்பிட முடியாது... இனிப்பை தொடக் கூடாதா... அவ்வளவு தான், வாழ்க்கையே முடங்கிப் போச்சு' என, பதறுகின்றனர்.

'டாக்டர், என் வாழ்க்கையில் இனி லட்டு, பாதாம் அல்வாவை பார்ப்பதோடு நிறுத்தி விட வேண்டுமா... இனிப்பு சாப்பிட முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை...' என்று கேட்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய், 'சர்க்கரை இருக்கிறதா... மரண தண்டனை அறிவிப்பு வந்து விட்டது... இனி, அதை எதிர்கொள்ள வேண்டியது தான்...' என்று விரக்தியின் உச்சிக்கே செல்பவர்களையும் பார்க்கிறேன்.

என்னுடைய, 40 ஆண்டு கால மருத்துவ அனுபவத்தில், இது போன்ற பயங்களையும், அர்த்தமற்ற நம்பிக்கைகளையும் விரட்ட, முயற்சி செய்து வருகிறேன். நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான கல்வியாளர் அவர். அவரின், 40வது வயதில், சர்க்கரை கோளாறு இருப்பது தெரிந்தது. என் தந்தை, மறைந்த டாக்டர் விஸ்வநாதனிடம் ஆரம்பத்தில் சிகிச்சை பெற்றார்.

சில ஆண்டுகளுக்குப் பின், அவருக்கு மருத்துவ ஆலோசனை சொல்லும் பேறு எனக்கு கிடைத்தது. உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, டாக்டரின் ஆலோசனைகள், பரிசோதனைக்கு வர வேண்டிய நாட்கள் என்று, எதிலும் அவர் அலட்சியமாக இருந்ததேயில்லை; இன்று அவரின் வயது, 99. தற்போது வரை, நல்ல நினைவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ரத்தத்தில், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, ரத்த அழுத்தம், கொழுப்பு என்று, எல்லாமும் கட்டுக்குள் உள்ளது.

நீண்ட காலம், சர்க்கரை கோளாறு இருந்தால் ஏற்படும் வேறு எந்த உடல் கோளாறுகளும், 60 ஆண்டுகளாக சர்க்கரை கோளாறுடன் வாழும் இவருக்கு இல்லை. 'இவர் ஏதோ அதிர்ஷ்டசாலி... இவர் ஒருவர் தான் இப்படி...' என்று நினைத்தால், அது தவறு. இவரைப் போல, சர்க்கரை கோளாறு உள்ள, 350 பேர், 90 வயதைக் கடந்தவர்கள். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.

சர்க்கரை கோளாறு இல்லாதவர்களைக் காட்டிலும், கோளாறு இருப்பவர்கள், இன்னும் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

எப்படி?



சர்க்கரை கோளாறு உள்ளவர், உணவு கட்டுப்பாடுடன் இருப்பார்; தினசரி உடற்பயிற்சி செய்வார்; மருத்துவ ஆலோசனைக்கு தவறாமல் வருவார். இதனால், சர்க்கரை கோளாறை பரிசோதிக்கும் போதே, மற்ற உடல் உறுப்புகளையும் பரிசோதிக்க முடிகிறது. இதனால், பிரச்னை சிறியதாக இருக்கும் போதே, அவசியமான சிகிக்சையை பெற முடியும்.

முன்பெல்லாம், ஒன்றிரண்டு மருந்துகளே சர்க்கரை கோளாறுக்கு இருந்தது. இன்று, பல நவீன மருந்துகள் வந்து விட்டன. இவர்கள் எல்லாம், 90 வயதைக் கடந்து வாழ்வதற்கு, மருந்துகள் காரணமில்லை; கட்டுப்பாடான, முறையான வாழ்க்கை முறை தான் காரணம்.

நுாறு வயது வாழ என்ன செய்ய வேண்டும்?



* நீரிழிவு நோயாளிகள், விருப்பமான எந்த உணவையும் சாப்பிடலாம். பசித்ததும், அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட உணவிற்கு, தகுந்த உடலுழைப்பு இருக்க வேண்டும்.

* தினமும், 30 - 45 நிமிடங்கள், உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.

* சரியான நேரத்தில் துாங்கி, சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டியது, மிகவும் அவசியம். வயிறு முழுக்க சாப்பிடாமல், அரை வயிறு சாப்பிட்டு, காலியாக விட்டால், வாயுத் தொல்லை, செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் வராது; சாப்பிட்ட உணவு நன்கு செரிக்கும்.

* மன அழுத்தம், பல பிரச்னைகளை உண்டாக்கும்; எனவே, மனதை பாரமின்றி வைத்திருக்க வேண்டியது முக்கியம். யோகா, பிராணாயாமம் செய்வது, மனதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

* இசை கேட்பது, புத்தகம் படிப்பது போன்ற, பிடித்தமான பொழுதுபோக்குகளுக்கு தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். இதுவும், மன அழுத்தத்தில் இருந்து காக்கும்.

* வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் பலர், வேலையையும், சொந்த வாழ்க்கையையும் சம அளவில் வைத்துக் கொள்ள தவறி விடுவர். வேலை பளு அதிகமாகும் போது, அதை எப்படி குறைத்துக் கொள்வது என்று தெரிந்து கொண்டால், மன அழுத்தம் வராமல் தடுக்கலாம்.

* மூன்று - நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, மருத்துவரிடம் சென்று, ஆலோசனைகளை, மருந்துகளை முறையாக சாப்பிட்டால், சர்க்கரை கோளாறால் வரும், பிற உடல் கோளாறுகளை எளிதாக தவிர்க்கலாம்.

* சிகரெட், புகையிலை, மதுப் பழக்கம் இருக்கவே கூடாது. இது, கணையம், கல்லீரலை பாதிப்பதோடு, புற்றுநோயையும் உண்டாக்க வல்லது.

டாக்டர் வி.மோகன்,

தலைவர்,

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவுசிறப்பு மையம்,

சென்னை.

078258 88631

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us