PUBLISHED ON : செப் 16, 2018

* எனக்கு அடிக்கடி தலைச்சுற்று ஏற்படுகிறது. என்ன காரணமாக இருக்கலாம்?
தலைச்சுற்றை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம். உடம்பு, தலை மட்டும் சுற்றுவது போல் தோன்றுவது. சுற்றுப்புறங்களில் உள்ள அலமாரி, டேபிள், நாற்காலி போன்றவை சுற்றுவது போல் தோன்றுவது. சில நேரங்களில் இரு கால்களும் சுற்றுவது போல் தோன்றுவது ஆகியனவாகும். இதற்குரிய காரணங்கள் முக்கியமாக காதில் கோளாறு ஏற்படுவது தான். ஏனென்றால் காதுகளின் கேட்கும் திறனானது நடக்கும் போதும், நிற்கும் போதும் சம நிலையை ஏற்படுத்தும். எனவே காது கோளாறுகள் மற்றும் உள் காதில் நீர் அதிகமாக இருத்தல், காதில் கிருமி தொற்று, ஒற்றைத்தலைவலி, சிலருக்கு மூளை சம்பந்தமான நோய்களாலும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
ரத்தக்கொதிப்பு, ரத்த சோகை நோய், சிறுநீரக கோளாறுகள், அடிக்கடி சளிப்பிடிக்கும் போதும் தலைச்சுற்று ஏற்படலாம். இருதயத் துடிப்பு கோளாறுகள் மற்றும் மூச்சு கோளாறுகளினாலும் ஏற்படாலம். முக்கியமாக கவனிக்க வேண்டியது, படுத்த மற்றும் உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நிற்கும் போது தலைச்சுற்று ஏற்பட்டால், அது தானியங்கி நரம்பு மண்டல கோளாறாக இருக்கலாம்.
ரத்தக்கொதிப்பு, மன அழுத்தத்திற்கு எடுத்து கொள்ளும் மருந்துகளாலும் தலைச்சுற்று ஏற்படலாம். எனவே, என்ன காரணம் என்று பரிசோதனைகள் மூலம் அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* எனக்கு திடீரென கண் இருட்டுவது போல் வருகிறது. அது மறுபடியும் சரியாகி விடுகிறது. என்ன காரணமாக இருக்கலாம்?
திடீரென கண் இருட்டுவது கண் சம்பந்தப்பட்ட நோயாக அல்லது இருதயம் மற்றும் மூளை, நரம்பு மண்டலம் சம்பந்த நோயாக இருக்கலாம். மூளையில் நீர் இருத்தல், ஒற்றைத்தலைவலி, கண்ணுக்கு செல்லும் ரத்த நாளம் அடைப்பு, கண் விழித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய், மது அருந்துதல் போன்றவற்றால் ஏற்படலாம். இதுபோல் ஏற்படும் போது கண்ணில் வலி இருக்கிறதா? கண்ணில் வெளிச்சம் ஏற்படுவது போல் தோன்றுகிறதா? அடிக்கடி தலைவலி வருகிறதா? சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு தாக்கம் உள்ளதா என்பதை அறிந்து, அதற்குரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
* எனக்கு வயது 40. இப்போதெல்லாம் அதிகமாக வியர்ப்பது போல் தோன்றுகிறது. என்ன காரணம்?
அதிகமாக வியர்த்தல் தானியங்கி நரம்பு மண்டல கோளாறுகளால் ஏற்படலாம். இது சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் ஏற்படலாம். சிலருக்கு இயற்கையாகவே வியர்க்கும் தன்மை அதிகமாக இருக்கும். எனவே அதை நினைத்து பயப்படக்கூடாது. வியர்க்கும் போது தலைச்சுற்று, மயக்கம், நெஞ்சுவலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.
சில மாத்திரைகளினாலும் வியர்வை ஏற்படலாம். காய்ச்சலுக்கு 'பாராசிட்டமால்' மாத்திரை உட்கொள்ளும்போது அதிகமாக வியர்க்கும். நிழலிலேயே இருந்து விட்டு திடீரென்று வெயிலில் சென்றால் உடம்பு அதிகமாக வியர்க்கும். நமது உடம்பு தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறி கொள்ளக்கூடியது.
இந்த மாறிக்கொள்ளும் குணம் வயது ஆகும் போது சில நோய்களால் நரம்பு மண்டலம் பாதிக்கும் போதும் குறைகிறது. மாணவர்களுக்கு சிலருக்கு அடிக்கடி வியர்க்கும். தேர்வு எழுதும் போது கைகளில் அதிகளவு வியர்த்து விடைத்தாள் நனைந்து எழுத்துக்கள் அழிந்து விடும்.
இம்மாணவர்கள் கவனமுடன் தேர்வு எழுத வேண்டும். கையில் கைக்குட்டை, துணிகளை கட்டுவதன் மூலம் வியர்வை விடைத்தாளில் படாமல் பார்த்து கொள்ளலாம்.
- டாக்டர் ஜெ.சங்குமணி
சர்க்கரை நோய் நிபுணர், மதுரை
sangudr@yahoo.co.in
