PUBLISHED ON : அக் 14, 2018

* எனக்கு 13 வயது ஆகிறது. வலிப்பு வந்துள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டுமா? இதனால் படிப்பு, விளையாட்டு, எதிர்காலம் பாதிக்கப்படுமா?
நம் மூளை, யோசிக்கும் திறன், செயல்பாடு மற்றும் உணர்வுகள் மின் துாண்டுதலின் மூலம் செயல்படுகிறது. வலிப்பு வரும் போது தவறான துாண்டுதல்கள் மூளையிலிருந்து வெளிப்பட்டு நம்மிடையே அது தேவையில்லாத செயல்களை செய்ய வைக்கும். உதாரணமாக கீழே விழுதல், மயக்க நிலை, கை, கால் இழுப்பு, வித்தியாசமாக நடந்து கொள்வது போன்றவைகளால் பிரதிபலிக்கலாம். சிகிச்சை எடுத்து கொள்வது வலிப்பை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அதனால் ஏற்படும் பின் விளைவுகளை குறைத்து விடும். டாக்டர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும். சில நேரங்களில் மருந்து உட்கொள்ள மறந்துவிட்டால், மீண்டும் நினைவு வரும் போது மறக்காமல் உட்கொள்ள வேண்டும். அடுத்த வேளை மருந்தை கட்டாயம் தள்ளிப்போடக்கூடாது. வயிற்று போக்கு, வாந்தி, பிற நோய்கள் தாக்கும் போதும் கட்டாயம் இந்த மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.
* வலிப்புக்கு எடுத்து கொள்ளும் மருந்தால் பக்க விளைவு ஏற்படுமா?
அனைத்து மருந்துக்கும் பக்க விளைவு உண்டு. மருந்து உட்கொள்ளா விட்டால் ஏற்படும் நோயின் தீவிர தாக்கத்தை தீர்க்க கட்டாயம் மருந்து உட்கொள்ள வேண்டும்.
* எனக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. இதற்காக உட்கொள்ளும் மருந்தால் வலிப்பு சிகிச்சை பாதிக்குமா?
நீங்கள் உங்கள் டாக்டரிடம் என்னென்ன மருந்துகள் தினமும் உட்கொள்கிறீர்கள் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற நோய்களுக்காக எடுத்து கொள்ளும் அனேக மருந்துகள் வலிப்பு சிகிச்சைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. உதாரணத்துக்கு தலைவலிக்காக எடுத்து கொள்ளும் பாராசிட்டமால் மாத்திரை அல்லது மற்ற நோய்களுக்காக எடுத்து கொள்ளும் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளால் வலிப்பு சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படாது.
* வலிப்பு நோய் பாதுகாப்பு வழிகள் என்ன?
குளியல் அறையில் உட்பக்கமாக பூட்டி கொள்ளக்கூடாது. குளியல் தொட்டியில் குளிக்க வேண்டாம். அதில் மூழ்க வாய்ப்புகள் உள்ளன. நீச்சல் குளத்தில் தகுந்த பயிற்சியாளர், மெய்க்காப்பாளர் இன்றி நீச்சலடிக்கக்கூடாது. அனைத்து விளையாட்டிலும் பங்கேற்கலாம். ஆயுதப்படை, விமானப்படையை தவிர பிற வேலைகள் அனைத்திலும் ஈடுபடலாம்.
- டாக்டர் முருகன் ஜெயராமன்
குழந்தைகள் நல நிபுணர், மதுரை.
94864 67452

