PUBLISHED ON : ஜூலை 24, 2016

புதினாவை முகர்ந்து பார்த்தாலே, அவ்வளவு ரம்மியமான வாசனை. கிரேக்க மருத்துவர்கள், இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக, ஜப்பானியரும், சீனரும், மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக, இக்கீரையை பயன்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு நகரங்களில் உள்ள ஓட்டல்களில், 'வெல்கம் டிரிங்' என்ற பெயரில், பல பழரச பானங்களில், புதினா சாறையும் கலந்து வழங்கும் போது, குடிக்க அருமையாக இருக்கும்; பசியையும் தூண்டும்.
குறிப்பிட்ட நோய்க்கு என்று இல்லாமல், உணவாக, எப்போதும் சேர்த்து கொள்ள கூடிய கீரையாக பயன்படுகிறது. சைவ, அசைவ உணவு வகைகளில், முக்கிய இடம் பிடிக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், மூட்டுவலி, வாயு தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். கீரையை மெல்வதால், நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால், இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும். புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும்; பார்வையை அதிகரிக்க செய்யும். பைடோ சத்துக்கள், மென்தால், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இதன் சாறு, அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளை குணமாக்கி விடும். பறித்த புதினா கீரையை, நன்கு சுத்தம் செய்து மிக்சியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால், செரிமானமும் ஆகும்; நன்கு பசியெடுக்கும்.
குடல் மற்றும் இரைப்பை புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும் வேதிப்பொருள், அதிகம் உள்ளது. சருமத்துக்கு போஷாக்கு அளித்து, சுருக்கங்களை போக்கும். அலர்ஜி, சரும எரிச்சல், மங்கு ஆகியவற்றை போக்கும் சக்தியை, தன்னகத்தே கொண்டுள்ளது. புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றை சேர்த்து, முதலில் வதக்கி, அரைத்து துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுவோர், இம்முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால், வயிற்று வலி பூரணமாய் குணமாகும்.
அலர்ஜியால் உண்டாகும் பக்க விளைவுகளை குறைக்கும். வைட்டமின் ஏ, பி, மற்றும் ஈ ஆகியவை உள்ளன. தீவிர வேலைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைத்து, ரத்தத்தை சுத்தப்படும். ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள், இதன் சாறை பருகினால், நிவாரணம் கிடைக்கும். சிறந்த கிருமி நாசினியாக விளங்குவதோடு, நுரையீரலை சுத்தப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டுள்ளது.
புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவர்; பேச்சாளர்கள், தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும்.
வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை, புதினாவை சமையலில் உபயோகித்தோம் என்றால், நம் உடல் ஆரோக்கியம் இன்னமும் மேம்படும்.
